கர்நாடகாவை சேர்ந்த பத்திரிக்கையாளரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய் கிழமை சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விதத்திற்கும், எழுத்தாளர்கள் எம்.எம்.கல்புர்கி மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலை செய்யப்பட்ட விதத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யார் இந்த கௌரி லங்கேஷ்:
பத்திரிக்கையாளரும் கவிஞருமான லங்கேஷ் என்பவரின் மகள் கவுரி லங்கேஷ். தனது தந்தை துவங்கிய ‘லங்கேஷ் பத்திரிக்கையின்’ ஆசிரியாராக பணியாற்றிய கவுரி லங்கேஷ், யாருக்கும் பயமில்லாத எழுத்துகளுக்கு சொந்தமானவர். லங்கேஷ் பத்திரிக்கை டேப்ளாய்டு வடிவிலானது. யாரிடம் இருந்தும் இந்த பத்திரிக்கைக்காக கவுரி லங்கேஷ் விளம்பரங்கள் பெறவில்லை. இந்துத்துவ எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, சாதியவாதத்திற்கு எதிரான எழுத்துகளை லங்கேஷ் பத்திரிக்கை மூலம் கடத்தியவர் கவுரி லங்கேஷ். வலதுசாரிய இயக்கங்கள் மற்றும் இந்துத்துவத்துக்கு எதிராக பல பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
2008-ஆம் ஆண்டில் கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரையை எதிர்த்து, பாஜக எம்.பி. பிரஹ்லாத் ஜோஷி மற்றும் உமேஷ் துஷி ஆகியோர் தொடர்ந்த குற்ற அவதூறு வழக்கில், 2016-ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ்-க்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட அந்த நாளே ஜாமீன் வழங்கப்பட்டது.
பத்திரிக்கை சுதந்திரம் குறித்து எப்போதும் தன் குரலை உயர்த்தியவர் கவுரி லங்கேஷ். மேலும், ஒருவரின் தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக அவர்கள் தாக்கப்படுவது குறித்த ஐயங்களையும் கௌரி லங்கேஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவர் கடைசி நாட்களில் பதிவிட்ட பதிவுகள்:
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகள் மற்றும் பொய் பிரச்சாரங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நமது பெரிய எதிரி மீது கவனத்தைக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.