Advertisment

சிவசேனா எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்திக்கு காரணம் என்.சி.பி; ஏன்?

கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் சரத் பவாரின் என்.சி.பி; அதிருப்திக்கான காரணங்களைப் பட்டியலிடும் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள்!

author-image
WebDesk
New Update
சிவசேனா எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்திக்கு காரணம் என்.சி.பி; ஏன்?

Vallabh Ozarkar 

Advertisment

Why NCP is the bugbear for Sena rebels: கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள 38 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களில் குறைந்தது ஆறு பேர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனா கட்சித் தொண்டர்கள் என்.சி.பி (தேசியவாத காங்கிரஸ்) கட்சியின் துன்புறுத்தல்களை அனுபவித்தாகவும், குறிப்பாக அந்தந்த தொகுதிகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கும் சூழலில், என்.சி.பி.,யின் "துன்புறுத்தல்" இருந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், சிக்கலில் உள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே அணுக முடியாதவராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். இவையே, 2019 ஆம் ஆண்டில் என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் தங்கள் சிவசேனா கட்சி உருவாக்கிய மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான அவர்களின் முடிவிற்கு காரணம் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.

MVA உருவாகும் வரை, சித்தாந்த ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் என்.சி.பி மற்றும் சிவசேனா நீண்ட காலமாக போட்டியாளர்களாக இருந்தன. இந்தக் கட்சிகளின் முதல் குடும்பங்களான பவார்கள் மற்றும் தாக்கரேக்கள், நல்லுறவை பேணி வந்தாலும், MVA கூட்டணியில் NCP யின் மேலாதிக்க செல்வாக்கு காரணமாக கட்சித் தலைவர்களிடையே பழைய போட்டிகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.சி.பி தலைவர் சரத் பவார், கூட்டணியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கருதப்பட்டார்.

இதையும் படியுங்கள்: உ.பி.,யில் சமாஜ்வாதியின் கோட்டைகளை தகர்த்த பா.ஜ.க; கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன?

தற்செயலாக, முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தான், மாநில சட்டமன்றத்தில் "சமமற்ற நிதிப் பகிர்வு" பிரச்சினையை முதலில் எழுப்பினார். இந்த ஆண்டு மார்ச் மாதம், NCP க்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பிடுகையில் சிவசேனா குறைவாகவே பெறுவதாகவும் கூறினார். என்.சி.பி.,யின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் அப்போது குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

என்.சி.பி மீது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள்:

* சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே, எம்.வி.ஏ என்பது "சிவசேனா பிடியில் இருக்கும் டிராகன்" என்றும், சிவசேனா மற்றும் சைனிக்களை விடுவிக்க போராடுவதாகவும்” ட்வீட் செய்துள்ளார்.

* அவுரங்காபாத் மேற்கு எம்எல்ஏ சஞ்சய் ஷிர்சத் கூறியதாவது: என்.சி.பி மற்றும் காங்கிரஸுக்கு நிதி கிடைக்கையில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்களுக்கு அவை கிடைக்கவில்லை. எங்கள் தொகுதியில் உள்ளவர்கள் எங்களிடம், ‘முதல்வர் நம்முடையவராக இருந்தும், உங்களுக்கு நிதி கிடைக்காமல் மற்ற கட்சிகளுக்கு எப்படி கிடைக்கிறது?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

* சதாரா மாவட்டத்தில் உள்ள கோரேகானின் எம்எல்ஏ மகேஷ் ஷிண்டே, என்.சி.பி.,யுடன் ஒப்பிடுகையில் சிவசேனா பெற்ற நிதியில் "பெரிய முரண்பாடு" இருப்பதாக குற்றம் சாட்டினார். "சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்கு ரூ. 50-55 கோடி நிதி பெற்ற நிலையில், அனைத்து என்.சி.பி எம்.எல்.ஏ-க்களும் குறைந்தபட்சம் ரூ. 700-800 கோடி நிதியை தங்கள் பகுதிகளுக்கு பெற்றுள்ளனர்." என்று கூறியுள்ளார்.

மேலும், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் "அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவதில்லை" என்றும், என்.சி.பி.,யின் துணை முதல்வர் அஜித் பவார் "முதல்வர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்க்கவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாநில என்.சி.பி தலைவர் ஜெயந்த் பாட்டீல் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார். அடுத்த தேர்தலில் என்.சி.பி வேட்பாளர்கள் அந்தத்தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் தனது உரைகளில் கூறிவருகிறார், என்றும் மகேஷ் கூறினார்.

* படான் எம்.எல்.ஏ.வும், மாநில இணை நிதி அமைச்சருமான சம்புராஜே தேசாய் கூறியதாவது: பல எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் தங்கள் பணிகளுக்காக என்னிடம் வருவார்கள், மேலும் பட்ஜெட்டில் நிதியை வழங்குமாறு கோருவார்கள். நான் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தபோதும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய எனக்கு அதிகாரம் இல்லை.

தேசாய் மேலும் கூறியது: “எனது சொந்தத் தொகுதியில் பணிகளை மேற்கொள்ள நிதியமைச்சர் அஜித் பவாரிடம் நான் தொடர்ந்து நிதி கேட்டுக் கொண்டிருந்தேன். எனது சொந்த அனுபவத்தில், முந்தைய மஹா யுதி (பாஜக-சிவசேனா) அரசாங்கத்திலும், எனது தொகுதிக்கு நான் அதிக நிதியைப் பெறவில்லை. ஆனால், நிதித்துறை இணை அமைச்சராக பதவியேற்ற பிறகும் எனது நிலை இதுதான் எனும் நிலையில், மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும் நிதி கிடைக்கவில்லை என்பதும் உண்மை தான். எம்.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் இருப்பதாக முதல்வரிடம் தெரிவித்து வருகிறேன் ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

* சாவந்த்வாடி எம்.எல்.ஏ., தீபக் கேசர்கர் கூறியதாவது: “சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சி நிதியைப் பெறவில்லை, ஆனால் என்.சி.பி தோல்வியடைந்த அதன் வேட்பாளர்களுக்கு நிதியை விநியோகித்தது. என்.சி.பி அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர்களையும் பலமாக உருவாக்கி நிதி அளித்து வளர்ச்சி செய்து வருகிறது, ஆனால் அதே நேரத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளைச் செய்ய நிதி கிடைக்காது.

முக்கியமான மந்திரி இலாகாக்கள் என்.சி.பி.,யால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று கேசர்கர் கூறியுள்ளார். மேலும், “நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில் துறை மட்டுமே எங்களிடம் இருந்த நல்ல துறைகள். மற்ற எல்லாவற்றிற்கும் நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய NCP இடம் செல்ல வேண்டியிருந்தது, என்றும் கூறினார்.

* அவுரங்காபாத்தில் இருந்து அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சந்தீபன்ராவ் பும்ரே கூறியதாவது: காங்கிரஸ் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், எங்களுக்கு என்.சி.பி.,யுடன் ஒத்துப்போகவில்லை.

* ஷிண்டே முகாமின் தலைமைக் கொறடாவும் எம்.எல்.ஏ.வுமான மஹத் பாரத்ஷேத் கோகவாலே கூறுகையில், உத்தவ், “2019 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் கடந்த 2.5 ஆண்டுகளில் ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை, அவர்களின் தொகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பலம் அளிக்க நிதி வழங்கவில்லை”, ஆனால், என்.சி.பி.,யின் அஜித் பவார், என்.சி.பி.,யின் அனைத்து எம்எல்ஏக்கள், கார்ப்பரேட்டர்கள், ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் மற்றும் சர்பஞ்ச்களுக்கு கூட பணம் கொடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment