நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். இதையடுத்து, கடந்த 12 மாதங்களின் பொருளாதார விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் இன்றைய கூட்டம் நிறைவுபெறும். 2018-2019ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுமித்ரா மகாஜன், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனையடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரை தடையின்றி நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
வேலை வாய்ப்பை அதிகரித்தல், விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், பொருளாதார வளர்ச்சி, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனந்த குமார், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முழு அளவில் முயற்சி மேற்கொள்ளும் எனவும், இதுகுறித்து அனைத்துக் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.