மும்பையில் கடந்த ஆறு மாதங்களாக தன்னை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறி, தன் மூத்த மகனுக்கு 50,000 ரூபாய் கொடுத்து இளைய மகனை கொலை செய்ததாக தாயை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி மும்பை நகர் பாயந்தர் பகுதியில் உள்ள குவாரியில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரது சடலத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சடலத்தின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன. சடலத்தின் கையில் ‘ராம்சரண்’ மற்றும் ‘ராஜ்னி’ ஆகிய பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையை துவங்கினர். மேலும், சடலத்தின் புகைப்படத்தை பால்கர், தானே, மும்பை, நவி மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சுமார் 20 நாட்களாக சடலத்தை அடையாளம் கண்டுகொண்டு யாரும் காவல் நிலையத்துக்கு வரவில்லை. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி, சுனிதா ஷர்மா என்ற பெண் பாயந்தர் காவல் நிலையத்துக்கு வந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் பெயர் ராம்சரண் (வயது 22) எனக்கூறி அவரது விவரங்களை போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து, போலீசார் ராம்சரண் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராம்சரணின் தாயார் தான் ராஜ்னி (வயது 55) என்பது தெரியவந்தது. ராம்சரண், ராஜ்னியின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்னி ஏற்கனவே காவல் நிலையத்துக்கு வந்ததாகவும், ஆனால், தன் மகனின் சடலத்தை அடையாளம் கண்டுகொள்ள அவர் தவறிவிட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, தன் மகன் ராம்சரண் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து காணாமல் போனதாகவும், வாசை பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ராம்சரண் அடிக்கடி வீட்டில் சொல்லாமலேயே வெளியிடங்களில் தங்குவார் என்பதால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை எனவும் ராஜ்னி காவல் துறையினரிடம் விசாரணையில் தெரிவித்தார்.
ஆனால், ராஜ்னி மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே அவரிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ராம்சரண் ராஜ்னியை சுமார் ஆறு மாத காலமாக பாலியல் துன்புறுத்தல் செய்துவந்ததாகவும், தன்னை மட்டுமல்லாமல் மற்றொரு பெண் உறவினரிடமும் ராம்சரண் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், ராஜ்னி போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, ராஜ்னி தன் முதல் கணவரின் மகன் சீதாராமிடம் (வயது 25) 50,000 ரூபாய் கொடுத்து, ராம்சரணை கொலை செய்துவிடுமாறு கூறியதாகவும், இதன்பின், சீதாராம் தன் நண்பர்கள் ராகேஷ் யாதவ் (வயது 23), மற்றும் கேஷவ் மிஸ்த்ரி (வயது 21) ஆகியோர் துணையுடன் குவாரி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து அங்குள்ள குவாரி கூட்டையில் வீசியதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, ராஜ்னி, சீதாராம் மற்றும் அவரது நண்பர்கள் ராகேஷ் யாதவ், கேஷவ் மிஸ்திரி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.