ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்து வருவதைத் தொடர்ந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் பதவி விலக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. இது தொடர்பாக மக்களவை செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தலைவர் கருணாகரன் கடிதம் கொடுத்துள்ளார். அதில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மக்களவை அலுவலில் பட்டியலிட வேண்டும் என சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை நான்கு கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், மக்களவை நாளை மீண்டும் கூடுகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு எதிராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளின் போது எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தெலுங்குதேச கட்சி எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.