Advertisment

சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து: வென்டிலேட்டரில் சிகிச்சை; ஒரு கண் பார்வை பறிபோகும் அபாயம்

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
சல்மான் ருஷ்டிக்கு கத்திக் குத்து: வென்டிலேட்டரில் சிகிச்சை; ஒரு கண் பார்வை பறிபோகும் அபாயம்

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(75). நியூயார்க்கில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டபோது அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டார். 10 முதல் 15 முறை அந்த நபர் ருஷ்டியை தாக்கியதாக அங்கிருந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ருஷ்டி சிகிச்சை பெற்று வருகிறார். ருஷ்டியை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்தியாவில் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. சிறு வயதிலேயே இங்கிலாந்திற்கு குடியேறினார். பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 1988ஆம் ஆண்டு வெளிவந்த அவரது படைப்பான 'தி சாத்தானிக் வெர்சஸ்' (The Satanic Verses) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல நாடுகள் இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் புத்தகத்திற்கு தடை விதித்தனர். பல இடங்களில் போராடங்கள் நடைபெற்றன. இஸ்லாமிய நாடுகளில் இந்த புத்தகம் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறைதூதர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் புத்தகம் இருப்பதாக கூறி புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த புத்தகத்திற்கு தடை உள்ளது.

இந்தநிலையில், 1989ஆம் ஆண்டு ஈரான் நாட்டு முன்னாள் அதிபர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவித்தார். இது ருஷ்டி உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. அதே ஆண்டு கொமேனி உயிரிழந்தார். பின்னர் வந்த அதிபர்கள் இந்த அறிவிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை.

மொழி பெயர்த்தவர்கள் மீது தாக்குதல்

புத்தகம் தொடர்பாக பல நாடுகளில் கலவரம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 45 பேர் கொல்லப்பட்டனர். ருஷ்டியின் சொந்த ஊரான மும்பையில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், புத்தகத்தை மொழி பெயர்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

1993ஆம் ஆண்டு புத்தகத்தின் நார்வே வெளியீட்டாளர் 3 முறை சுடப்பட்டு உயிர் பிழைத்தார். இந்தநிலையில், மேற்கு நியூயார்க்கில் நேற்று(ஆகஸ்ட் 12) கருத்தரங்கு ஒன்றில் உரையாற்ற சல்மான ருஷ்டி கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான பேர் அங்கு திரண்டனர். அப்போது திடீரென மேடைக்கு வந்த நபர் சல்மான ருஷ்டியை தாக்கி கழுத்து, வயிற்றில் கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்த ருஷ்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

24 வயது நபர் கைது

அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் கூறுகையில், "ருஷ்டி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கல்லீரல் சேதமடைந்துள்ளது. நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் கண் பார்வை இழக்க நேரிடும்" என தெரிவித்தனர்.

ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியவர், ஹாடி மாதர் (24) நியூ ஜெர்சியில் உள்ள ஃபேர்வியூ பகுதியைச் சேர்ந்தவர் என போலீஸார் அடையாளம் கண்டனர். ஹாடி மாதரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை என மாநில போலீஸார் தெரிவித்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment