தாய்லாந்து குகையில் மாட்டிக் கொண்ட மாணவர்கள் 12 பேரை மீட்க உதவிய 9 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விருது.
தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் சியாங் மாகாணத்தில் தாம் லுவாங் நாங் நாண் என்ற 7 கிலோ மீட்டர் குகை உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி கால்பந்து விளையாடிவிட்டு 12 மாணவர்களும் அவர்களின் பயிற்சியாளரும் குகைக்குள் சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.
வடக்கு தாய்லாந்தில் பருவமழை காலம் இது என்பதால், நன்றாக மழை பெய்து, அதன் வெள்ள நீர் குகையை சூழ்ந்து கொண்டது. அதனால் அவர்களை மீட்பதில் பல தொய்வுகள் மற்றும் ஆபத்துகள் நிலவி வந்தன.
தாய்லாந்து குகைக்குள் மாட்டிக் கொண்ட மாணவர்கள் விபரம் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள
ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகள்
தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து 13 நபர்களையும் மீட்க உதவிய 9 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வீர தீர செயல்கள் புரிந்தமைக்கான விருதுகள் வழங்கி சிறப்பித்தது.
அதில் மயக்க மருந்தியல் நிபுணர் மற்றும் குகை நீச்சல் வீரரான ரிச்சர்ட் ஹாரிஸ் மற்றும் அவருடைய சக நீச்சல் வீரர் க்ரைக் சலான் ஆகியோரும் அடக்கம்.
அவர்கள் இருவருக்கும் ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ஸ்டார் ஆஃப் கரேஜ் விருது (Star of Courage) வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அரசின் முதன்மை விருதான க்ராஸ் ஆஃப் வாலோர் விருதுக்கு அடுத்த நிலை விருது தான் இந்த ஸ்டார் ஆஃப் கரேஜ் விருது.
மற்ற 7 வீரர்களுக்கு, அதற்கும் அடுத்த நிலை விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்.
இந்த 9 வீரர்களும் தாய்லாந்தில் ஜூலை 8 முதல் 10 தேதி வரை நடைபெற்ற மீட்புப் பணியில் அயராது உழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி நபரை வெளியில் அழைத்து வந்த சிறிது நேரத்திற்குள் ஹாரிஸ் ரிச்சர்ட் அவரின் தந்தையார் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.