Advertisment

கோத்தபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பினார்

ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்து, நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு பொறுப்பாக இருப்பதாக பலர் கருதுகின்றனர்.

author-image
WebDesk
New Update
Gotabaya Rajapaksa

Gotabaya Rajapaksa

ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, இப்போது ஏழு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் நாடு திரும்பினார். வெள்ளியன்று நள்ளிரவில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு ராஜபக்சே வந்தார்.

Advertisment

அவரது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்ட ராஜபக்ச, ஆயுதமேந்திய ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, தலைநகர் கொழும்பின் மையத்தில், முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான வீட்டை அடைந்தார்.

ஜூலை 13 அன்று, வெளியேறிய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்க்காப்பாளர்கள் சிங்கப்பூர் செல்வதற்கு முன், மாலதீவுக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்டனர், அங்கிருந்து அவர் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் தாய்லாந்துக்கு சென்றார்.

ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு அல்லது கைது வாரண்ட் எதுவும் நிலுவையில் இல்லை.

அவர் தனது மூத்த சகோதரரின் தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ராஜபக்சே எதிர்கொண்ட ஒரேயொரு நீதிமன்ற வழக்கு, 2019 இல் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அரசியலமைப்பு விதிவிலக்கு காரணமாக வாபஸ் பெறப்பட்டது.

பல மாதங்களாக, இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ளது, இது எதிர்ப்புகள் மற்றும் பொதுமக்களின் ஆத்திரத்தைத் தூண்டியது, இறுதியில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு போன்ற உலகளாவிய காரணிகளால் திவாலான நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்தது. ஆனால் ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்து, நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு பொறுப்பாக இருப்பதாக பலர் கருதுகின்றனர்.

பொருளாதார சீர்குலைவு, கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பல மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக வங்கியின் ஆதரவின் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் மீட்டெடுக்கப்பட்டாலும், எரிபொருள், முக்கியமான மருந்துகள் மற்றும் சில உணவுப் பொருட்களின் பற்றாக்குறை தொடர்கிறது. இலங்கை நாடு, இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கிட்டத்தட்ட 7 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.

நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் $51 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, இதில் $28 பில்லியன் 2027க்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இப்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) உடனான ஆரம்ப உடன்படிக்கையின் கீழ் இலங்கை நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 2.9 டாலர் பில்லியன் பெற உள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் 270 பேர் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வாக்குறுதியின் பேரில் முன்னாள் இராணுவ அதிகாரியான ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார், ஏனெனில் அந்த நேரத்தில் சட்டங்கள் இரட்டை குடியுரிமை மக்கள் அரசியல் பதவியை வகிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியது.

நாட்டின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது, சிறுபான்மை இனமான தமிழர்களின் சுதந்திர ராஜ்யத்திற்காக போராடி தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலி கிளர்ச்சியாளர்கள் மீது, இலங்கை இராணுவம் தொடுத்த மனித உரிமை மீறல்களை மேற்பார்வையிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரியாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

ஏப்ரலில், எதிர்ப்பாளர்கள் கொழும்பின் மையத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வெளியே முகாமிடத் தொடங்கினர், "கோடா, வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று கோஷமிட்டனர், ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, விரைவில் பேரணியாக மாறியது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் பிடியை தகர்த்தன. ராஜபக்சே ராஜினாமா செய்வதற்கு முன்பு, அவரது மூத்த சகோதரர், பிரதமர் பதவியில் இருந்து விலகினார், மேலும் மூன்று நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அமைச்சரவை பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆனால், நாட்டின் புதிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, போராட்டங்களை ஒடுக்கினார்.

தலைவராக அவரது முதல் நடவடிக்கை, நள்ளிரவில் போராட்டக் கூடாரங்களை அகற்றுவதும், போலீஸ் வலுக்கட்டாயமாக அந்த இடத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றி அவர்களைத் தாக்கியதும் அடங்கும்.

இப்போது எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பும் மக்கள் மத்தியில் உண்மையான அச்சம் நிலவுகிறது என மாற்றுக் கொள்கைகளுக்கான சுயாதீன சிந்தனைக் குழுவின் பவானி பொன்சேக்சா தெரிவித்தார்.

மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் பல அடக்குமுறைகள் இடம்பெற்று வருகின்றன. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதனால் அச்சம் உள்ளது,” என்று அவர் கூறினார்.

ஆளும் SLPP கட்சி அவரை மீண்டும் வரவேற்கும் என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஆனால் அவர் திரும்புவது மக்களை மீண்டும் தெருக்களில் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் என்று நினைக்கவில்லை. கோத்தபயவின் அத்துமீறல்களுக்காக மன்னிக்கப்படுவதற்கு எந்த வழியுமில்லை, ஆனால் பொது ஆத்திரத்தை விட அதிக கசப்பு இப்போது அவருக்கு காத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ”என்று ஜயதிலகா மேலும் கூறினார்.

எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்த உதவிய ஒரு அமைப்பாளரான நஸ்லி ஹமீமைப் பொறுத்தவரை, முன்னாள் ஜனாதிபதியின் நாடு திரும்புவது ஒரு பிரச்சினை அல்ல. அவர் இலங்கை பிரஜை என்பதால் அவர் திரும்பி வருவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆனால் ஊழல் அமைப்புக்கு எதிராக நீதியை விரும்பும் ஒருவன் என்ற முறையில், நான் நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன் - நீதி கிடைக்க வேண்டும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவர் நாட்டுக்கு என்ன செய்தாரோ அதற்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும்.

கோத்த, வீட்டுக்குப் போ’ என்பதுதான் எங்களின் முழக்கம் - அவர் ஓடிவிடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவர் தீவிர அரசியலில் ஈடுபடாத வரை, அது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று நஸ்லி ஹமீம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka Rajapakse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment