இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி குல்பூஷண் ஜாதவ், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.
இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் ஐ.நா. அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.
இந்தியா தரப்பில் வாதிட்டபோது, "வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, "வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது” என்று வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் இன்று அளித்துள்ள இறுதித் தீர்ப்பில், "பாகிஸ்தான் தனது தூக்கு தண்டனை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். மீண்டும் வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வியன்னா பிரகடனத்துக்கு எதிரான வகையில் பாகிஸ்தானில் குல்பூஷண் வழக்கு நடைபெற்றுள்ளதாக கூறிய நீதிமன்றம், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷனுக்கு உரிமை உண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.