Advertisment

மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு செல்ல தடை – இலங்கை கோர்ட் உத்தரவு

மகிந்த ராஜபக்ச, நமல் ராஜபக்ச உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை; ஆர்ப்பாட்டகாரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக இலங்கை நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு செல்ல தடை – இலங்கை கோர்ட் உத்தரவு

Sri Lankan court imposes overseas travel ban on former PM Mahinda Rajapaksa, 16 others: கொழும்பில் இந்த வாரம் அமைதியான முறையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்ச மற்றும் 15 பேர் வெளிநாடு செல்வதற்கு இலங்கை நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

Advertisment

திங்கட்கிழமை கோட்டகோகம மற்றும் மைனகோகம அமைதிப் போராட்ட தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர்களது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கோரியுள்ளது. போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் வன்முறையில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமன்னே உட்பட ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மேற்கு மாகாணத்தின் மூத்த காவல்துறை டி.ஐ.ஜி (SDIG) தேசபந்து தென்னகோனும் உள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் இல்லத்திற்கு எதிரேயும், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் செயலகத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கொடூரமாக தாக்கியதாக இந்த குழு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச, அரசியல் பலத்தை வெளிப்படுத்தி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து, தனது அடிமட்ட ஆதரவாளர்களை ஒன்று திரட்டினார். அதற்குள் இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுமாறு ஆளும் கூட்டணிக்குள் இருந்து அவருக்கு அழுத்தம் அதிகரித்தது.

மகிந்த ராஜபக்ச ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தினார், இதனையடுத்து பல வாரங்களாக ராஜபக்சக்களை ராஜினாமா செய்யக் கோரி போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். ராஜபக்சே நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு போராட்டக்காரர்களைக் குற்றம் சாட்டினார்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலால் தூண்டப்பட்ட தன்னெழுச்சியான வன்முறை அலையில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாடு முழுவதும் ஆத்திரமடைந்த கும்பல்களால் பல அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

சில மணி நேரங்களுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதுடன் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

2005 முதல் 2015 வரை ஜனாதிபதியாக இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது மிருகத்தனமான தாக்குதலுக்காக பிரபலமாக அறியப்பட்ட மகிந்த ராஜபக்ச, திங்கட்கிழமை அவரது தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டதைக் கண்டார். தனது ஆதரவாளர்கள் மீதான தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களுக்குப் பிறகு, ராஜபக்ச, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன், தனது அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸை விட்டு வெளியேறி, திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தார்.

இதையும் படியுங்கள்: இலங்கை நெருக்கடியில் திருப்புமுனை : பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்கிரமசிங்கே?

புதன்கிழமை இரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, திங்கட்கிழமை "சம்பவத்தை" தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 1948 இல் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்போது தான் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியானது வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட ஒரு பகுதியாகும், இதன் பொருள் நாடு முக்கிய உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாது, இது கடுமையான பற்றாக்குறை மற்றும் மிக அதிக விலை உயர்வு நிலைக்கு வழிவகுத்தது.

ராஜபக்ச சகோதரர்களை ராஜினாமா செய்யக் கோரி இலங்கை முழுவதும் ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

இலங்கை அரசியலில் பல ஆண்டுகளாக ராஜபக்சே குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பத்தின் கடைசி உறுப்பினர் கோத்தபய ராஜபக்ச மட்டுமே. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாலும், ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்தவோ அல்லது இலங்கையில் அமைதியை ஏற்படுத்தவோ கோட்டபய எதுவும் செய்யவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka Rajapakse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment