பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), அவாமி தேசிய கட்சி, ஜாமி யத் உல்மா இ இஸ்லாம் கட்சி (மவுலானா பஸ்லுர் ரகுமான் அணி) ஆகிய எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
அவை இம்ரான் கான் அரசு மீது அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளன.
இம்ரான் கான் அரசை கவிழ்த்து விடுவதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த யூடியூப் பக்கமானது "பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்" (PMO) என இருந்தது. தற்போது அந்த பக்கத்தில் இம்ரான் கான் என உள்ளது.
இந்த பெயர் மாற்றமானது அவர் பதவியில் இருந்து விரைவில் விலக்கக் கூடும் என்ற சந்தேகத்தை வலுக்கிறது.
உக்ரைனில் 7-வது ரஷிய படைத் தளபதி பலி
உக்ரைனில் 7-வது ரஷ்ய படைத் தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரை சொந்தப்படையினரே கொன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 1 மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. இந்த போர்க்களத்தில் ரஷ்யா ஏற்கனவே 6 தளபதிகளை பறிகொடுத்துள்ளது. இந்த நிலையில் 7-வது தளபதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் (வயது 48). இவர் 49-வது கூட்டுப்படையின் தளபதி ஆவார். உக்ரைனுக்கு ரஷியாவால் 20 படைத்தளபதிகள் அனுப்பப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 13 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இது ரஷ்யாவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் மற்றொரு தகவலின் படி, அவர் தனது சொந்தப்படையினராலேயே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ‘தி நேஷனல்’ (அபுதாபி ஆங்கில நாளிதழ்) கூறுகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்: உக்ரைன் முதல் கட்டப் போர் முடிவு; டான்பாஸில் கவனம் செலுத்தும் ரஷ்யா
புதின் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாது - ஜோ பைடன்
உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பயணம் மேற்கொண்டுள்ளார். நேட்டோ நாடான போலாந்துக்கு சென்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார்.
அதேபோல், போலாந்துக்கு வந்துள்ள உக்ரைன் அமைச்சர்களுடனும் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைனில் இருந்து அகதிகளாக போலாந்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை ஜோ பைடன் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து நேட்டோ, அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஜோ பைடன் பேசினார்.
அப்போது ஜோ பைடன் பேசுகையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. ரஷிய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி. அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர். நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த புதின் முயற்சிக்கிறார். அவர் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றார்.
அமெரிக்கரை விடுவித்தது ரஷ்யா
அமெரிக்காவைச் சேர்ந்த டைலர் ஜாகோப் என்பவரை ரஷ்ய படைகள் உக்ரைனில் சிறை பிடித்து வைத்திருந்தது.
28 வயதான டைலர் பேருந்தில் உயிருக்கு அஞ்சி உக்ரைனிலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது ரஷ்ய படைகள் அவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி சிறை பிடித்தனர்.
தெற்கு உக்ரைனில் அவர் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரை ரஷ்ய ராணுவம் 10 நாட்களுக்கு பிறகு விடுவித்துள்ளது. இதனை அவர்கள் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.