கோயமுத்தூர் மாவட்டம், கோட்டைபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும், 39 மாணவ மாணவிகளும், மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படிக்கும் 4 மாணவ, மாணவிகளும் என 43 பேர் பெங்களூருக்கு மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். கோயமுத்தூர் ரோட்டரி மோனார்க்ஸ் சார்பில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பெங்களூரு அறிவியல் கண்காட்சி, உயிரியல் பூங்கா, நேஷனல் ஏரோநாட்டிக் லிமிடெட் உட்பட பெங்களூருவில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களை மாணவர்கள் சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, பெங்களூரில் இருந்து கோவைக்கு விமான மூலம் மாணவ மாணவிகளை அழைத்து வந்தனர்.
முதல்முறையாக விமானத்தில் பறந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த விமான பயணம் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறுகையில் எங்களைப் போன்று வசதியற்ற குழந்தைகள், இதுபோன்று கல்வி சுற்றுலாவுக்கு சென்று, விமானத்தில் பயணிக்கும் போது எங்களது மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதுபோன்று வசதியற்ற மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து ரோட்டரி சங்கம் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“