உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது உங்களைச்சுற்றி உங்களை பார்த்துக்கொள்வதற்கு ஒருவரும் இல்லை.
ஊரடங்கு எல்லோருக்கும் ஒரு புதிய முயற்சிக்கான காலமாகவே உள்ளது. அதுவும் குடும்பத்தினரை பிரிந்து பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் வாழ்பவர்களுக்கு மிகவுமே கடுமையான காலமாக உள்ளது. தங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்து பெரும்பாலானோர் ஏக்கத்துடனும், கவலையுடனுமே உள்ளனர். அதேநேரத்தில் அன்பு மற்றும் வீட்டிலிருக்கும் சுகத்தையும் இழக்கின்றனர். நீங்கள் அவ்வாறான ஒரு சூழலில் மாட்டிக்கொண்டீர்களென்றால், இதோ அதை கையாள்வதற்கு உங்களுக்கு சில குறிப்புகள்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
உங்களுக்கு தெரிந்த வீட்டு வேலைகளை நன்றாக பயன்படுத்துங்கள்
உங்கள் வீட்டிலிருந்து உங்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. உங்களுக்கு உதவுவதற்கு வீட்டைச்சேர்ந்த ஒருவரும் அருகில் இல்லை. உங்களுக்கு வேறு வழியில்லை. உங்களுக்கு தெரிந்த வீட்டு வேலைகளை வைத்து சமாளிக்க வேண்டும். உண்மையில், இது உங்களுக்கு சமையல் செய்து பழகுவதற்கு சரியான வாய்ப்பளிக்கும் சமயம். தற்போது கிடைக்கக்கூடிய வசதிகள் மூலம் சமையலை நன்றாக கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யலாம். பல்வேறு வீட்டு வேலைகளான தோட்டப்பராமரிப்பு, வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரங்களை கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளை நீங்களே செய்துகொள்ளலாம். இதனால், இந்த ஊரடங்கு முடியும்போது, உங்களுக்கு நிறைய வேலைகள் தெரிந்திருக்கும். உங்களை உங்களால் நன்றாக கவனித்துக்கொள்ள முடியும். இதை ஒரு கற்றுக்கொள்ளும் காலமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு போன் செய்யுங்கள்
தொழில்நுட்பம் தற்போது அனைவரையும் ஒருவரோடொருவர் தொடர்பில் இருப்பதை எளிதாகிக்கிவிட்டது. எப்போதெல்லம் உங்கள் குடும்பத்தினரை இழப்பதுபோல் எண்ணுகிறீர்களோ அப்போதெல்லாம், அவர்களை போனில் அழைத்து பேசுங்கள். ஒரு நாளில் ஒருமுறையேனும் பேசுவது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். இது குறிப்பாக நீங்கள் சோர்வாக உணரும்போது உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தற்போது வீடியோ கால் செய்யும் வசதிகளும் சுலபமாகிவிட்டது. எனவே அதன் மூலமும் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் பேசுவது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்.
ஒரு பொழுதுபோக்கை கண்டுபிடியுங்கள்
தற்போது உங்கள் பழைய பொழுதுபோக்கை தொடர்வதற்கும், புதிய பொழுதுபோக்கை உருவாக்கிக்கொள்வதற்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும். உங்களுக்கு தற்போது அதிக நேரம் இருக்கும். உங்கள் தனிமையை போக்கிக்கொள்வதற்கான ஒரு சிறப்பான காரணமாகவும் உங்களின் பொழுதுபோக்குகள் அமையும். பொழுதுபோக்கு இருப்பது உடன் ஒருவர் இருப்பதற்கு சமம். மேலும் அது உங்கள் மனநலத்திற்கும் சிறந்தது. வரைதல், ஓவியம், தையல், ஆடல், பாடல் என்று எது வேண்டுமானாலும் உங்கள் பொழுதுபோக்காக இருக்கலாம். எது உங்களுக்கு ஏற்றது மற்றும் மகிழ்ச்சியளிப்பது என்பதை கண்டுபிடியுங்கள்.
நல்ல படம், நிகழ்ச்சி பார்ப்பது, பாடல் கேட்பது
பொழுதுபோக்கைப்போலவே, உங்களுக்கு துணை தேவைப்படும்போது, நல்ல படம், பாடல், நிகழ்ச்சிகளும் உங்களுக்கு நல்ல துணையாக இருக்கும். அது நீங்கள் இணையத்தில் பார்ப்பது அல்லது பல மணி நேரங்களுக்கு கேட்பதாக இருக்கலாம். ஏதேனும் ஒரு பயனுள்ள விஷயம் உங்களையும், உங்கள் மனதையும் நன்றாக வைத்திருக்கும்.
சுய பராமரிப்பை பழகுங்கள்
உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். உங்களை கவனித்துக்கொள்வதற்கு உங்களை சுற்றி ஒருவரும் இல்லாத சூழலில் உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தனியாக இருப்பதால் உங்களால் அது முடியும். நீங்கள் தனியாக இருப்பதால் ஏற்படும் சலிப்பை போக்கிக்கொள்வதற்காக நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் அல்லது இரவு நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்பதல்ல. உறங்கும்நேரம், சரியான சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் கூடிய போதியளவு ஓய்வு கட்டாயம் அவசியம். உங்களை நீங்கள் கவனித்துக்கொள்ளவில்லையென்றால், உங்கள் குடும்பத்தினரை வருத்தமடையச்செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த சுய தனிமை என்பது நாம் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஒன்றுதான். தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவுமாகும். எனவே நம் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது இந்த நேரத்தில் அவசியமாகிறது.
தமிழில் : R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.