இந்தியாவில், இறுதியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றும், இதற்காக அவர்கள் கோவின் தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது தடுப்பூசி போட அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு செல்லலாம் என்றும் கூறியது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பில்லை என்றாலும், ஒருவேளை அவர்களுக்கு தொற்று பாதித்தால் அவர்களின் நிலை வேகமாக மோசமடையக்கூடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இணைநோய்களுடன் மேலும் ஆபத்துகளை அதிகரிக்கிறது என்று டெல்லியைச் சேர்ந்த மகப்பேறியல் நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அமோடிதா அஹுஜா கூறுகிறார்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து உங்களுக்கு சில அச்சங்கள் இருக்கக்கூடும், எனவே, “விழிப்புடன் இருப்பதன் மூலமும், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் இருப்பதன் மூலமும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பது நல்லது.” என்று டாக்டர் அஹுஜா கூறினார்.
கொரோனா தடுப்பூசிக்கு முன்னும் எடுத்துக் கொள்ளும்போதும், அதற்குப் பின்னரும் கர்ப்பிணிப் பெண்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை மருத்துவர் indianexpress.com உடன் பகிர்ந்து கொள்கிறார்.
* தடுப்பூசி செலுத்துவதற்கு முந்தைய நாள், நீரேற்றமாக இருங்கள். தடுப்பூசிக்கு செல்வதற்கு சற்று முன்பு ஒரு நல்ல 8 மணிநேர தூக்கம் அவசியம். மேலும், லேசான உணவை உட்கொள்ளுங்கள்.
* தளர்வான ஆடைகளை அணியுங்கள், குறிப்பாக கைகளில் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அதற்கேற்றாற்போல் ஆடை அணியுங்கள்.
* எந்தவொரு மருந்து அல்லது முந்தைய தடுப்பூசி டோஸுக்கு ஒவ்வாமை எதிர்வினை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் வரலாறு இருந்தால், தடுப்பூசி மையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறுங்கள்.
* தடுப்பூசி மையத்தில் இருக்கும்போது, இரட்டை முகக்கவசம் அணிவது போன்ற அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றவும். முகக்கவசத்தின் முன் பகுதியைத் தொடாதீர்கள், மேற்பரப்புகளைத் தொடுவதைத் தவிர்க்கவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் வேண்டும்.
* தடுப்பூசி எடுத்த பிறகு, குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும், ஏனென்றால் ஏதேனும் பாதகமான விளைவு இருந்தால், அது முதல் 30 நிமிடங்களில் தோன்றும்.
* வீட்டிற்கு வந்த பிறகு, காய்ச்சல், உடல் வலி, தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்தபின் ஒரு பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளுங்கள்.
* உங்களுக்கு கை வலி இருந்தால், ஒரு ஹீட் பேக்கைப் பயன்படுத்துவதால் நிறைய நிம்மதி கிடைக்கும்.
* உங்கள் இரும்புச்சத்து, கால்சியம் ஆகிய மருந்துகளைத் தொடரவும். அதனுடன், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவற்றையும் கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவை விரைவாக மீட்க உதவும்.
* நாள் முழுவதும் ஓய்வெடுத்து உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்.
* மூச்சுத் திணறல், மார்பு வலி, வீக்கம் அல்லது கைகால்களில் வலி, தோலுக்கு அடியில் மற்றும் தடுப்பூசி செலுத்திய பகுதிக்கு அப்பால் சிறிய ரத்தக்கசிவு, கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைவலி, வெளிப்படையான காரணங்கள் இல்லாமல் தொடர்ந்து வாந்தி, மங்கலான பார்வை அல்லது கண்களில் வலி போன்ற சில பாதகமான விளைவுகளை நினைவில் கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் கர்ப்ப அறிகுறிகளுடன் மிகவும் ஒத்ததாக இருக்கும், ஆனால் அவை தொடர்ந்து இருந்தால், உடனடியாக உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்ளுங்கள்.
* நீங்கள் உங்கள் கடைசி மூன்று மாதங்களில் இருந்தால், கருவின் அசைவுகளைக் கவனியுங்கள். எந்த நேரத்திலும், அசைவுகள் குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்.
* நீண்டகால விளைவுகள் தெரியவில்லை என்றாலும், கொரோனா நிலைமையைப் பார்க்கும்போது, அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.