சாம்பார் என்றாலே அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்ற சலிப்பு அனைவரிடத்திலும் ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக திருமணம் ஆகாத பேச்சுலர்களுக்கு சொல்லவே வேண்டாம். விரைவாகவும், எளிதாகவும் செய்யக் கூடிய சாம்பாரை இங்கே பார்ப்போம்
சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்: எண்ணெய் – இரண்டு டீ ஸ்பூன், கடுகு – கால் டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன், கடலை பருப்பு – ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் – அரை டீ ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 5, கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – தேவைகேற்ப, தண்ணீர் – தேவையான அளவு, கடலை மாவு – 2 டீ ஸ்பூன்
சாம்பார் செய்வது எப்படி?
திடீர் சாம்பார் செய்முறை வருமாறு: வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் . நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும். பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இந்த சமையல் குறிப்பை உங்கள் நண்பரிடத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil