உங்கள் மருத்துவர், “நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள்”, என கூறினால், நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள் என ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கனெக்டிக்கட் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உடல் பருமனாக இருப்பவர்களை மருத்துவர்கள் கேலி செய்வது அவர்களை மனதளவில் கவலை கொள்ள செய்யும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதனால், அவர்களின் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும்.
பருமனாக இருப்பவர்களை பெரும்பாலான மருத்துவர்கள் மரியாதையின்றி நடத்துகின்றனர். ஏதேனும் உடல் நல பிரச்சனைகளுக்காக, மருத்துவமனைக்கு சென்றால் சோதிக்காமலேயே “உடம்பை குறையுங்கள்”, என அறிவுரை வழங்குவார்கள். உடல் நலத்திற்காக சொல்கிறார்கள் என எடுத்துக்கொண்டாலும், பரிசோதனை செய்யாமல் மேலோட்டமாக “உடல் பருமனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது”, என சில மருத்துவர்கள் கூறுவர். இதனால், நோயாளிகளுக்கு மன அழுத்தம், தன் நோய்க்காக சிகிச்சை எடுப்பதை தள்ளிப்போடுதல், மருத்துவர்களை அனுகாமல் இருத்தல் உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொள்வர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதுமட்டுமல்லாமல், மருத்துவம் சார்ந்த பல ஆய்வுகளில் உடல் பருமனாக இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உடல் பருமனாக உள்ள நோயாளிகளுக்கு உடல் நல பிரச்சனைகள் என்றால், ஸ்கேன்கள், ரத்த பரிசோதனை உள்ளிட்டவற்றை பரிந்துரை செய்யாமல், உடல் எடையைக் குறைக்குமாறு மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது நோயாளிகளை மனதளவில் பாதிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதனால், அந்நோயாளிகள் மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், உடல் பருமனாக உள்ள நோயாளிகளை தொடுவதற்கு, கை குலுக்க மருத்துவ பரிசோதகர்கள் தயங்குவதால், அவர்கள் உள்ளார்ந்த கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோயாளிகளின் எடையைக் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்காமல் அவர்களது உடல் நல குறைபாட்டுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.