நாம் பயன்படுத்தும் பயறுகளில் பச்சைப் பயறு தனித்துவமானது. இதனை அப்படியே வேகவைத்து மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். பச்சைப் பயிறை நாம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம். பச்சை பயறில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், கால்சியம், மற்றும் இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளன. இதனை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்கலாம், இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும், முடி உதிர்வை தடுக்கவும், உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
இத்தனை நன்மைகளைத் தரும் பச்சைப் பயிறை வேகவைத்து சாப்பிட பிடிக்காதவர்களுக்காகவே இந்த அருமையான டிப்ஸ். பச்சைப் பயிறை பூண்டுடன் சேர்த்து துவையலாக அரைத்து சோறுடன் சாப்பிட அவ்வளவு சுவையாய் இருக்கும். இப்பொழுது அந்த ருசியான சத்தான துவையல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு - அரை கப்,
பூண்டு - ஒரு பல்,
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
புளி – தேவையான அளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
துவையலை எப்படி செய்வது?
வெறும் வாணலியை சூடாக்கி, பச்சைப் பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது, பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
அவை அனைத்தும் நன்றாக ஆறியபின் வறுத்து வைத்த பச்சைப் பயறுடன், உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
இப்போது, சத்தான சுவையான பச்சைப்பயறு துவையல் தயார்.
இளஞ்சூடான சோற்றில் இந்த துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, சாப்பிட்டால் நீங்கள் சாப்பிட்டுகொண்டே இருக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil