ஜீ தமிழ் டிவியில் தினசரி ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில், டான்ஸ் மாஸ்டர் நந்தா, ஆஷா கவுடா, நளினி, காயத்திரி, சங்கரேஷ் குமார், வசந்த் கோபிநாத், விஷ்ணுகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட அர்ஜூனுக்கு, வசுவுக்கும் இடையிலான காதல் கதை தான் இந்த சீரியல்.
இதில் அர்ஜூனின் மனைவியாக வசுவாக நடிக்கும் ஆஷா கவுடா’ தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் பல ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டார்.
இந்நிலையில் அவர் பிரபல மீடியாக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ETimes TV உடனான பிரத்யேக உரையாடலில்,” ஏரோபிக்ஸ் பயிற்சியாளராக இருந்து நடிகையாக மாறிய தனது பயணம்” குறித்து ஆஷா கவுடா பேசினார். “நடிப்பு என்னுடைய முதல் தேர்வாக இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் நிறைய ஜிம் பயிற்சியாளர்கள் உள்ளனர். அதனால், ஜிம் ட்ரெய்னராக வேண்டும் என்று நினைத்து, சிறிது காலம் ஏரோபிக்ஸ் பயிற்சியாளராகப் பணிபுரிந்தேன் என்று ஆஷா’ தமிழ் தொலைக்காட்சியில் தனது பயணத்தை விளக்கினார்.
"எனது இன்ஸ்டாகிராமைப் பார்த்து, எனக்கு ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. அது என்னை வசுந்திராவாக மாற்றியது," என்று அவர் கூறினார்.
ஆஷா கவுடா ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் வசுந்திரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வசுந்திராவாக தனக்கு கிடைத்த வரவேற்பை பற்றி ஆஷா கூறுகையில், "வசுந்தராவின் பிரபலம் எனக்கு முன்னரே தெரியாது. ஆனால் சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தோம். கிராமத்தில் உள்ள அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடி எங்கள் மீது அன்பைப் பொழிந்தனர். கிராம மக்கள் ‘வசு’வை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைப் போல நடத்தினார்கள்.
அவர்கள் எங்களுக்காக சமைத்துக் கொடுத்தார்கள், எங்களை கவனித்துக்கொண்டார்கள். தமிழ் மக்களின் ‘அன்பு’ மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று ஆஷா மனம் நெகிழ்ந்தார்.
மேலும் அவர் பேசுகையில், "உண்மையில், ரசிகர்களின் ஆதரவே என்னை இயக்குகிறது, ஒரு நடிகையாக, நான் எனது தொழிலில் கச்சிதமாக இருக்க கடினமாக முயற்சி செய்கிறேன். என்னை பற்றி தவறாக பேசும் சக மனிதர்களை சமாளிக்க நான் போராடுகிறேன்.
முன்பெல்லாம் எனக்கு மொழி பரிச்சயம் இல்லை. ஆனால் இப்போது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
எனது ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நான் அறிவுறுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் தங்களால் முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும், யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று ஆஷா கூறினார்.
மேலும் சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையையும் ஆஷா பகிர்ந்து கொண்டார். அது "ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறார். நாம் அனைவரும் அதை அறியாமல் வரிசையில் இருக்கிறோம்."
இந்த கவிதை குறித்து ஆஷா கூறுகையில், சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவு எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, அவருக்காக தான் அந்த கவிதை எழுதினேன். புனித் குமார் மறைந்த நாள் என்னை நிறைய யோசிக்க வைத்தது.
“தினமும் யாராவது நம்மை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள். நாம் என்ன சம்பாதித்தாலும், எவ்வளவு புகழும், பெயரும் இருந்தாலும் எல்லோரும் நம்மை விரைவில் மறந்துவிடுவார்கள். மற்றவர்களுக்காக சில நினைவுகளை மட்டும் தான் நாம் விட்டுச் செல்கிறோம். அதுதான் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம்.
எனவே நாம் உயிருடன் இருக்கும் வரை, பிறரை புண்படுத்தக் கூடாது என்று நான் நம்புகிறேன் என ஆஷா கவுடா ETimes TV க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.