Advertisment

இன்று அனுமன் ஜெயந்தி: அஞ்சனை மைந்தன் வழிபாட்டின் சிறப்புகள் இவைதான்!

Hanuman jayanti celebrations: அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hanuman Jeyanthi Special Poojas, அனுமன் ஜெயந்தி

Hanuman Jeyanthi Special Poojas, அனுமன் ஜெயந்தி

Hanuman Jeyanti Special Poojas at Sucheendram, Naamakkal Hanuman Temples: அனுமன் ஜெயந்தி இன்று! அனுமன் வழிபாடு, மிக பிரசித்தம். தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரிய அனுமன் சிலைகளை அமைத்து இந்துக்கள் வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தியான இன்று (ஜனவரி 5) விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.

Advertisment

அனுமன் எனப்படும் ஆஞ்சநேயர், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். இந்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி (இன்று) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு பல்லாயிரக்கணக்கில் வடைகள், லட்டுகள் படைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

ராம நாமம் கேட்கும் இடங்களில் அனுமன் அமர்ந்திருப்பார் என்பது ஐதீகம். அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் என்றும் பக்தர்கள் அனுமனை அழைக்கிறார்கள். ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன்.

ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர் என்கிற அனுமன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தியான இன்று (ஜனவரி 5-ம் தேதி) ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஐதீகம்.

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட அனுமன் சிலையை உடைய ஆஞ்சநேயர் ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று அனுமனுக்கு லட்சத்து எட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், பகல் 11 மணிக்கு உச்சகால பூஜை நடந்தன. மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.

காலை 5 மணிக்கு ராமர் சன்னதியில் அபிஷேகம், 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஷோடச அபிஷேகம் நடந்தன. இதில் பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு, குங்குமம், களபம், மஞ்சள், நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், மாதுளம்சாறு, எலுமிச்சம் சாறு, கரும்புச்சாறு என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

மேலும் நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மாலையில் புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 2 லட்சத்து 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டன.

முக்கியமான விஷயம், தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து அனுமான் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment