Hotel rasam recipe, milagu rasam in tamil : கல்யாண ரசம் செய்வதற்கு முதலில் ஆறு தக்காளி எடுத்து கொள்ளுங்கள். அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை அதில் போடவும். கூடவே ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை இலை சேர்த்து கொதிக்க விடவும்.
Advertisment
தக்காளி மற்றும் புளி சாஃப்டாக வேகும் வரை கொதிக்கட்டும். இதற்கு இடையில் ரச பொடி தயார் செய்ய ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய் ஆகிய சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வையுங்கள். தக்காளி நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அது ஓரளவு ஆறியதும் மசித்து எடுத்து கொள்ளுங்கள். தக்காளியின் தோலை மட்டும் நீக்கி விடுங்கள். இப்போது இதனை மீண்டும் அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்த ரச பொடி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ரசம் அதிகமாக கொதிக்க கூடாது. கல்யாண ரசத்தில் ஒரு வித இனிப்பு சுவையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்கு காரணம் அவர்கள் ரசத்தில் தேங்காய் தண்ணீர் சேர்ப்பது தான். அதனால் ரசம் கொதிக்கும் முன் ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள தண்ணீரை ரசத்தில் ஊற்றுங்கள்.
ரசத்தை தாளிக்க தாளிப்பு கரண்டியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், 1/4 தேக்கரண்டி பெருங்காய தூள், நசுக்கி வைத்த 6 பல் பூண்டு ஆகியவற்றை தாளித்து ரசத்தில் கொட்டி கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவுங்கள். ரசம் நுரை பொங்கி வரும்போது அடுப்பை அணைத்து விடலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”