கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து சதத்தை தொட்டுவிட்டது. பொதுவாகவே இவ்வாறு சுட்டெரிக்கும் கோடையில் உடலில் உபாதைகள் வருவது வழக்கம். நீர்ச்சத்து குறைபாடு, சூட்டுக் கட்டிகள் மற்றும் சரும பிரச்சனைகள் என அனைத்து வகை பாதிப்புகளும் ஏற்படும். இதில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்குத் தொந்தரவு தருவது வியர்க்குரு தான்.
வெயில் தாக்கத்தால் அதிகம் வியர்வை வழிவதால் அல்லது சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தால் சருமத்தில் விய்ர்க்குரு வரும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும், முகத்தின் நெற்றி, முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தான் வியர்க்குரு உருவாகும்.
இந்த வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள். வீட்டிலேயே வியர்க்குருவை சரி செய்யலாம்.
1. மூலிகை சோப்:
மூலிகையின் நற்குணங்கள் கொண்ட சோப்புகளை உபயோகித்து தினமும் இரண்டு வேளைக் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியர்க்குரு வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.
2. வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு அந்தத் துண்டுகளை வியர்க்குரு உள்ள இடங்களில் பூசி 10 அல்லது 15 நிமிடங்கள் நன்றாக தேய்த்தெடுத்தால் வியர்க்குரு இரண்டு நாட்களில் மறைந்துவிடும்.
3. கற்றாழை:
சோற்றுக் கற்றாழையை நடுவில் கீறி இரண்டாக வெட்டினால் உள்ளே கொழ கொழப்பாக ஜெல்லி போன்று இருக்கும். அந்த பசையை எடுத்து கழுத்து, முக, முதுகு ஆகிய பகுதிகளில் பூசி 15 நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், அதன் குளுமையை உடனே உணர முடியும். இதனால் அரிப்புகள் குறையும்.
4. சாமந்திப் பூ:
சாமந்திப் பூவின் சாறு சரும பிரச்சனைகளுக்கு உகந்தது. சாமந்திப் பூவை அம்மையில் அல்லது கைகளினா நசுக்கிப் பிழிந்தால், அதிலிருந்து சாறு வெளிவரும். அந்தச் சாற்றை வியர்குருவின் மேல் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்றாகக் கழுவினால் வந்த இடம் தெரியாமல் சரும பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து போகும். இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.
5. சாதம் வடித்த கஞ்சி:
இது நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய அடிப்படை பொருள். உணவுக்கு அரிசி பொங்கியதும், அந்தச் சாதத்தின் கஞ்சியை வீணாக்காமல் குளிக்கும்போது அல்லது இளைப்பாரும் நேரத்தில் உடல் முழுவதும் பூசி ஊறவைத்துக் குளித்தால்,வியர்க்குரு அனைத்தும் சட்டென ஓடிவிடும்.
ஒருபுறம் இது போன்ற டிப்ஸ் இருந்தாலும், கோடையில் நாம் உண்ணும் உணவில் கவனம் வேண்டும். காரம் அதிகமாகச் சாப்பிட கூடாது, மேலும், இளநீர், நுங்கு, வெள்ளரி, கிர்ணிப்பழம், தர்பூசணி, பழச்சாறு ஆகிவற்றை அருந்த வேண்டும். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் வியர்க்குரு வருவதில் இருந்து தப்பலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.