How to preserve Coriander leaves fresh for long time Tamil News : சமையலுக்கு சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் முக்கியமாக நல்ல மணத்தையும் சேர்ப்பதில் கொத்தமல்லிக்கு அதிக பங்கு உண்டு. ஆனால், அவை ஒருசில நாட்களிலேயே சீக்கிரம் வாடிப்போய்விடும்.
கவரிலோ அல்லது வேறு எதாவது பாத்திரத்திலோ, டப்பாவிலோ அடைத்து வைத்தாலும் அவை அழுகிப்போகக்கூடும். ஆனால், இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நீங்கள் வாங்கும் கொத்தமல்லி இரண்டு வாரம் வரை ஃப்ரெஷாக இருக்கும்.
உங்கள் கொத்தமல்லி நீண்ட நாள்களுக்கு அழுகாமல் வாடிவிடாமலும் ஃப்ரெஷாக இருக்க, கொத்தமல்லி கட்டின் வேர்ப்பகுதியை முதலில் நறுக்கிவிடுங்கள். பிறகு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்த மஞ்சள் நீரில் வேர்கள் நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அதனை நன்றாகக் கழுவிவிட்டு நிழலிலோ அல்லது மின் விசிறியிலோ உலரவையுங்கள்.
இப்போது, கொத்தமல்லியில் நீர்த்துளிகள் எதுவும் இல்லாமல் நன்கு உலர்ந்திருப்பதை உறுதி செய்யுங்கள். அதற்கு, பேப்பர் டவலில் கொத்தமல்லியை ஒற்றி எடுக்கவும். முழுமையாக உலர்ந்ததை உறுதிப்படுத்திய பிறகு, கொத்தமல்லித் தழையை முழுவதுமாக பேப்பர் டவலை சுற்றி அப்படியே காற்றுப்புகாத டப்பாவில் அதனை அடைத்து வைக்கவும்.
பிறகு, அந்த டப்பாவை பிரிட்ஜில் வைத்து சமையலுக்குத் தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுமார் இரண்டு வாரங்கள் வரை இந்த கொத்தமல்லித் தழை அழுகாமல் அப்படியே இருக்கும். பேப்பர் டவல் இல்லாவிட்டால் வெள்ளை பேப்பரில் கொத்தமல்லித் தழையை நன்றாக சுருட்டிவைத்துவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.