இந்த பொடுகுத் தொல்லையால பல இடங்களில் தலையை சொறிய முடியாமல் நம்மில் பலரும் தவித்திருப்போம். சீயக்காவை விட்டு விட்டு கடைகளில் கிடைக்கும் ஷாம்பூவை என்று பயன்படுத்த ஆரம்பித்தோமோ அப்போதே முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை போன்றவை ஏற்படத் தொடங்கிவிட்டன.
தலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. அழகாக அலங்கரித்த தலையில் அங்கங்கே காணப்படும் வெள்ளை திட்டுகளாக பொடுகு தோன்றும்போது பார்க்க நன்றாக இருக்காது.
ஆகவே பொடுகை போக்க சில இயற்கை உபாயங்கள் எளிய முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வேப்பெண்ணெய் : பொடுகை போக்க வேப்பெண்ணெய் ஒரு மிக சிறந்த பொருள். இது பொடுகை போக்க மட்டும் அல்ல, தலையில் இருக்கும் பல்வேறு தொற்றுகளை போக்க வல்லது. குறிப்பாக பேன் அதிகமாக இருப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். தலையில் வேப்பெண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின்பு தலையை அலசலாம்.
ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ச்சரைசர். இது தலை முடிக்கு நல்ல ஈரப்பதத்தை தந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஆலிவ் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். இரவில் உறங்க செல்வதற்கு முன் இதனை செய்யலாம். இரவு முழுதும் எண்ணெய், தலையின் வேர்கால்களுக்குள் ஊடுருவி பொடுகை குறைக்கும். மறுநாள் காலை தலையை அலசலாம்.
எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது.