#MeToo பிரச்சாரம் மூலம், பிரபலங்கள் தங்கள் சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். இந்த நிலையில், புனேவில் உள்ள மூன்றாம் நிலை பாதுகாப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 890 பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், பாலியல் தொடர்பாக 890 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில், 534 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் வயது 18க்கும் கீழ் உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, சுமார் 60 சதவிகித வழக்குகளில் குழந்தைகளே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
நவம்பர் 2015லிருந்து செப்டம்பர் 2017 வரை பதிவான வழக்கில் 60.23% குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதில், 92.88 % பெண்களும், 7.12 % ஆண்களும் அடங்குவர். 62.55 % பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது 15 - 18க்குள் இருக்கிறது.
மேலும், 93.63 % வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கு தெரிந்தவரே சீரழிக்க முயன்று இருக்கின்றனர். 39.51% வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.
பெரும்பாலான வழக்குகளில் வாடகைக்கு தங்கியிருக்கும் வீடுகளில் தான் குற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. 26.40% வாடகை வீடுகளில் குற்றம் நடந்துள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்தவர்களில் 61.80% பேர் 21 முதல் 30 வயதுடையவர்கள் என்று அந்த புள்ளி விவரம் கூறுகிறது. 17.80% குற்றவாளிகள் 11-20 வயதுடையவர்களாகவும், 34% குற்றவாளிகள் 16 - 18 வயதுடையவர்களாகவும் உள்ளனர். 50.75% வழக்குகளில் குற்றவாளிகள் தங்களது காம இச்சையை மதிய நேரத்தில் தான் நிறைவேற்றியுள்ளனர்.
கோடை காலத்தில் குறிப்பாக, மே - ஜூலை மாதத்திற்குள் தான் அதிக அளவிலான பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. குளிர் காலத்தில் இந்த எண்ணிக்கை 27.15% ஆக உள்ளது.
75.09% வழக்குகளில் பிறப்புறுப்பு காயம் அடைந்துள்ளது.