IRCTC Tamil News: டெல்லியில் இருந்து சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு செவ்வாய்கிழமை 15 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய 12 கட்டளைகளை உள்துறை வெளியிட்டது. பயணிகள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா பொது முடக்கத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 2 மாதகால இடைவெளிக்குப் பிறகு, முதல் முறையாக டெல்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 15 ரயில்கள் இதற்கு தயார் செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இருந்து கிளம்புகின்றன.
IRCTC Special Trains: எந்தெந்த நகரங்களுக்கு...
ரயில்கள் டெல்லியில் இருந்து கீழ்கண்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
1. டிப்ருகார்க் ( Dibrugarh)
2. அகர்தலா (Agartala)
3. ஹவுரா (Howrah)
4. பாட்னா (Patna)
5. பிலாஸ்பூர் (Bilaspur)
6. ராஞ்சி (Ranchi)
7. புபனேஷ்வர் (Bhubaneswar)
8. செகந்தராபாத் (Secunderabad)
9. பெங்களூரு (Bengaluru)
10. சென்னை (Chennai)
11. திருவனந்தபுரம் (Thiruvananthapuram)
12. மட்கான் (Madgaon)
13. மும்பை சென்ட்ரல் (Mumbai Central)
14. அகமதாபாத் (Ahmedabad)
15. ஜம்மு தாவி (Jammu Tawi)
மேற்படி 15 நகரங்களுக்கும் செல்லும் ரயில்களுக்கு இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிலும் முன்பதிவு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். கொரோனா அறிகுறிகளோ, கொரோனா பாசிட்டிவாகவோ பயணிகள் இருக்கக் கூடாது.
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து ரயில்களும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும். இந்த ரயில்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அவை வருமாறு:
1. பயணிகள் 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையம் வந்து சேரவேண்டும்.
2. அனைத்துப் பயணிகளும் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள்.
3. நோய் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
4. ரயிலில் ஏறும்போதும், பயணிக்கும்போதும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
5. அனைத்துப் பயணிகளும் ரயிலுக்கு வரும்போதும், பயணிக்கும்போதும் முகக் கவசம் அணிய வேண்டும்.
6. இணையதளம் மூலமாக முன்பதிவு உறுதி செய்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
7. உறுதி செய்யப்பட்ட இ- டிக்கெட்டுடன் வரும் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் வாகன ஓட்டிகளும் ரயில் நிலையத்திற்கு வரவும், அங்கிருந்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.
8. பயணிகள் இறங்கும் இடம் வந்ததும், அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச சுகாதாரத்துறை நடைமுறைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும்.
9. பயணிகள் தங்கள் வீட்டிலிருந்து உணவு, சொந்த பெட்ஷீட், டவல் கொண்டு வரவேண்டும்.
10. முன்கூட்டியே ‘பேக்’ செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், பிஸ்கட்ஸ் ஆகியன ரயில்வே கேட்டரிங் ஊழியரிடம் கிடைக்கும், தேவைப்படுகிற பயணிகள் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
11. ரயில் நிலையத்திலும், அனைத்து ‘கோச்’களிலும் கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்கள் வழங்கப்படும்.
12. இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்ய சேது ஆப் டவுண்லோடு செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். ஆனால் அது முன் நிபந்தனை அல்ல.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.