இங்க யாருக்கும் பெயரே இல்லையாம்! இந்தியாவில் ஒரு விசித்திர கிராமம்
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) ‘சிறந்த சுற்றுலா கிராமம்’ வரிசையில் மூன்று இந்திய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேகாலயாவின் கோங்தாங், தெலுங்கானாவின் போச்சம்பள்ளி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லத்புரா காஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்தன. இதில், கோங்தாங் கிராமத்தின் சிறப்பைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
மேகலாயா மாநிலம் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து, 56 கி.மீ. தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலை கிராமம் காங்தாங். மேகாலயாவின் சோஹ்ரா மற்றும் பைனுர்ஸ்லா மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள அழகிய, அமைதியான கிராமம், அதன் அழகான நிலப்பரப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது இசை வழங்கும் பண்டைய பாரம்பரியத்தின் தாயகமாகவும் உள்ளது.
Advertisment
அப்படி என்ன இந்த கிராமத்தின் சிறப்பு என்ன என்று யோசிக்கிறீர்களா?
வழக்கமாக ஒரு குழந்தை பிறந்ததும் நாம் என்ன செய்வோம். அதை பாராட்டி, சீராட்டி விதவிதமாக பெயர் சூட்டுவோம். ஆனால், இங்கு காசி என்று அழைக்கப்படும் கிராமவாசிகள் அவர்களின் பெயர்களால் அல்ல, ஒரு குறிப்பிட்ட ட்யூனால் தான் அறியப்படுகிறார்கள்.
இந்த தனித்துவமான ட்யூனை வைத்தே ஒருவரையொருவர் அழைத்து கொள்கிறார்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் என தனித்தனி ட்யூன் உள்ளது.
‘ஜிங்கிராவை லாபி’ என்ற மரபின் படி, பாரம்பரியமாக இந்த கிராமத்தில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாய் தனது குழந்தைக்காக ஒரு ட்யூனை தயார் செய்கிறார். குழந்தை பிறந்த உடன் அதனுடைய காதுகளில் தாய் இந்த ட்யூனை பாடினால் அது உடனே குழந்தையின் பெயராகி விடுகிறது. அந்தக் குறிப்பிட்ட ட்யூன் வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை.
வெளியிலிருக்கும் குழந்தைகளை வீட்டிற்கு அழைப்பதற்காகவோ அல்லது நண்பர்களை விளையாட அழைப்பதற்காகவோ ஒருவரையொருவர் இப்படி ஓசை இட்டு அழைத்துக் கொள்வார்கள். இந்த இசை தூரத்தில் இருந்து கேட்கும்போதும் விசில் ஒலி போன்று இருப்பதால், காங்தாங் ‘இந்தியாவின் விசில் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது.
நாங்கள் இந்த பாரம்பரியத்தை சொத்தாக பாதுகாத்து வருகிறோம். பழங்குடியின மக்கள் என்றாலும் எங்களுக்கு என சில சிறப்பு குடும்பப் பெயர்களும் இருக்கிறது. அதனால் ட்யூனை பெயருடன் இணைத்து வாசிக்கிறோம். அதேபோல ஒருவருக்கு இசைத்த விசிலை வேறு ஒருவருக்கு இசைப்பதில்லை. அப்போது தான் புதுமையான ட்யூன் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த கிராமவாசிகள் கூறுகின்றனர்.
இந்த கிராமத்தை உங்கள் பக்கெட் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“