மத்திய அரசின் சில்ப் குரு விருது வென்றதன் மூலம் தஞ்சாவூர் ஓவியம் இன்னும் பிரபலமாகும் என்று தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் வி.பன்னீர்செல்வம் கூறினார்.
Advertisment
இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக ஆண்டுதோறும் சில்ப் குரு விருது தேசிய அளவில் வழங்கப்படுகிறது. அந்தவகையில், மத்திய அரசின் கைவினைத் துறை சார்பில் டெல்லியில் சில்ப் குரு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) நடைபெற்றது.
இதில் 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 30 பேருக்கு சில்ப் குரு விருதுகளும், 78 பேருக்கு தேசிய விருகளும் வழங்கப்பட்டன.
சில்ப் குரு விருதுகள் மிகச் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. சில்ப் குரு விருது பெறும் கலைஞருக்கு தங்க நாணயத்துடன், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
கைபின்னல் வேலை, மண்பாண்டம் செய்தல், களம்காரி, தஞ்சாவூர் ஓவியம், தெரக்கோட்டா வேலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு கை வேலைப்பாட்டுத் திறனுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் நகரைச் சேர்ந்த "தஞ்சாவூர் ஓவியக் கலைஞர்" வி.பன்னீர்செல்வம் (59) 2019-ம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரிடம் இருந்து பெற்றார்.
விருது பெற்ற மகிழ்வில் இருந்த ஓவியர் வி.பன்னீர்செல்வம் நம்மிடம் பேசுகையில்; நான் கும்பகோணத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தஞ்சாவூர் பாணி ஓவியங்களை வரைந்து வருகிறேன். என்னிடம் 30 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் மாணவர்கள் பலருக்கும் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை பயிற்சியாக வழங்கி வருகிறேன். நான் ஏற்கெனவே தேசிய விருது, மாநில அளவில் பூம்புகார் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளேன்.
தற்போது கைவினைத் துறையில் மிக உயரிய விருதான சில்ப் குரு விருதுக்கு 3 ஆயிரம் பேர் பங்கேற்றதில் தமிழகத்திலிருந்து நான் மட்டுமே தேர்வாகி இந்த விருதை பெற்றுள்ளேன். இதனால் தஞ்சாவூர் ஓவியத்துக்கு நான் நன்றிகடன் பட்டுள்ளேன். இந்த விருது மூலம் தஞ்சாவூர் ஓவியம் இன்னும் பிரபலமாகும் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“