கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு, வருங்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய், இதயத்திற்கு ரத்த ஓட்ட குறைபாடு, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிர்மிங்காம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்விற்காக 1990 முதல் 2016-ஆம் ஆண்டு காலகட்டத்தில், கர்ப்பமாக இருக்கும்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 9,000 பெண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
அந்த ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு வருங்காலத்தில், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் 20 மடங்கு அதிகமாகவும், இதயத்திற்கு ரத்த ஓட்ட குறைபாடு ஏற்பட இரண்டரை மடங்கு அதிகமாகவும், மன அழுத்தம் ஏற்பட இரண்டு மடங்கு அதிகம் எனவும் எச்சரிக்கிறது. அதாவது, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படாத பெண்களைவிட இவர்களுக்கு, வருங்காலத்தில் நீரிழிவு நோய் உட்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.