Magic moments of Manike Mage Hithe viral Sri Lankan song Tamil News : அமிதாப் பச்சன், மாதுரி தீக்ஷித் முதல் சமூக ஊடக வைரல் படைப்பாளர்கள், பொது மக்கள் வரை அனைவரும் ‘மணிகே மகே ஹிதே’ என்ற இலங்கைப் பாடலுடனான ரீல்ஸ் காணொளியைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்கள் வீடியோக்களில் இந்தப் பாடலை பின்னணி இசையாக வைத்திருக்கிறார்கள், சிலர் அதற்கேற்ற நடனமாடியுள்ளனர்.
இந்த வைரல் சிங்களப் பாடலின் சமீபத்திய பதிப்பு கடந்த மே 2021-ல், இலங்கைப் பாடகர்கள்-ராப்பர்களான யோஹானி மற்றும் சதீஷன் ஆகியோரால் பாடப்பட்டு வெளியிடப்பட்டது. அவர்கள் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்தனர்.
என்றாலும், இந்த பாடலின் ஒரிஜினல் பாதிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாடகர் சதீசன் மற்றும் ராப்பரும் இந்தப் பாடலின் பாடலாசிரியருமான துலன் ஏஆர்எக்ஸ் ஆகியோர் இணைந்து பாடி இலங்கையில் வெளியிடப்பட்டது. இதனை இசை தயாரிப்பாளர் சாமத் சங்கீத் தயாரித்தார். தற்போது வைரலாக இருக்கும் யோகானி ஒரிஜினல் பதிப்பில் பாடவில்லை என்பது பலருக்குத் தெரியாது.
ஒரிஜினல் பாடலை உருவாக்கியது பற்றிப் பேசிய சங்கீத், “2020-ம் ஆண்டில், சதீஷன் அவருக்காக ஒரு பாடலை தயாரிக்கும்படி என்னிடம் கோரியிருந்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர் என்னிடம் வந்தபோது, நான் அவருக்காக தயாரித்த பாடல் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் மீண்டும் நான் ஒரு புதிய பாடலை உருவாக்கினேன். அதுதான் இந்த மணிகே மகே ஹிதேவின் அசல் பதிப்பு" என்றார்.
அதுமட்டுமின்றி, இலங்கை இசை தயாரிப்பாளர் துலன் ஏஆர்எக்ஸ் இந்தப் பாடலுக்கான பாடல்களை எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், மேலும் இந்தப் பாடலை ஆக்கப்பூர்வமாக உருவாக்க ராப் பாடச் சொன்னதாகவும் கூறினார்.
இந்தப் பாடல், இலங்கையில் ஒரு கிராமத்தில் உள்ள ஓர் அழகான பெண் பற்றிப் பேசுகிறது. "இந்தப் பாடலை பாடுபவர், அந்தப் பெண்ணை காதலிக்கிறான். அவனை அவள் புறக்கணித்து அவனுடைய உணர்வுகளை இழக்கச் செய்யாதே என்று அவன் சொல்வதுபோல வரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது" என்று சங்கீத் மேலும் கூறினார்.
ஹசித் ஆர்யன் இயக்கிய இந்த இசை வீடியோவில் மதுஷி சோயாசா, கசுன் தாரகா மற்றும் ருவான் பிரியதர்ஷனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். "பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று நாங்கள் உணர்ந்ததால், ஹசித் ஆர்யனிடம் பாடலுக்கான மியூசிக் வீடியோவை நாங்கள் செய்தோம்" என்று சங்கீத் குறிப்பிட்டார்.
வைரல் கவர்
அசல் பாடல் வெளியான ஒரு வருடத்திற்குப் பிறகு, இலங்கை பாடகர்-ராப்பர் யோஹானியுடன் சங்கீத் இணைந்து, அதே பாடலின் அசல் பாடகர் சதீஷனை உள்ளடக்கி டூயட் கவரை மே 2021-ல் வெளியிட்டார்.
"கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் இருந்தபோது, வெளியே செல்ல முடியாத நிலையில் யோஹானியுடன் கூட்டுச்சேர்ந்தோம். அந்த நேரத்தில் எங்களுக்குக் கிடைத்ததைப் பயன்படுத்திக் கவர் பாடலை மிக எளிமையான முறையில் செய்தோம்” என்றார் சங்கீத்.
‘மணிகே மகே ஹிதே’ வெளியானதிலிருந்து இந்த பதிப்பு இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கான மிகவும் பிரபலமான ட்யூன்களில் ஒன்றாக மாறியது மட்டுமல்லாமல், ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெற்றி பெற்றது. இது யூடியூபில் 100 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை கடந்துள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவில் ஐடியூன்ஸ் முதல் 100 இடங்களில் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பாட்டிஃபை இந்தியா மற்றும் ஸ்பாட்டிஃபை குளோபல் ஆகியவற்றில் டாப் வைரல் 50-ல் இடம் பிடித்தது.
சமத் சங்கீத் இந்த பதிப்பு இவ்வளவு தூரம் வந்து ஒரே இரவில் வைரலாக மாறும் என்று கற்பனை கூடச் செய்யவில்லை என்று கூறுகிறார். "இலங்கையின் இசைத் துறையில் முதன்முதலில் நாட்டிற்கு (இலங்கைக்கு) வெளியே வைரலாகும் முதல் பாடல் மணிகே மகே ஹிதே" என்று குறிப்பிடுகிறார்.
"இந்த வெற்றியை அடைந்திருப்பது எனக்கு இன்னும் ஒரு கனவு போல் இருக்கிறது. நம்பமுடியாத மகிழ்ச்சியில் திளைக்கிறேன்" என்று சங்கீத் கூறினார்.
இந்திய மொழிகளில் ‘மணிகே மகே ஹிதே’
ஒவ்வொரு முறையும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் ஏதாவதொரு பாடல் அல்லது வசனம் அல்லது இசை வைரலாகி வருகிறது. அது நாட்டில் மிகவும் பிரபலமாகி விடும். இந்த ஆண்டு மே மாதம் வெளியான ‘மணிகே மகே ஹிதே’ அத்தகைய ஒரு வைரல் பாடல்தான்.
இசை தயாரிப்பாளர் யஷ்ராஜ் முகதேவின் கவரிலிருந்து ஒரு விமானப் பணிப்பெண் ஒரு வெற்று விமானத்தில் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வரை, கடந்த சில வாரங்களாக இந்தப் பாடலின் வைரல் லிஸ்ட் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வைரலாகப் போன பாடல் சிங்களத்தில் பாடப்பட்ட கவர் பாடல் என்பதால், பல யூடியூப் கலைஞர்கள் வெவ்வேறு இந்திய மொழிகளில் இந்தப் பாடலின் பதிப்புகளை வெளியிடுவது பரந்த அளவிலான பார்வையாளர்களைச் சென்றடையும் என்று கருதினர்.
அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்த அனஸ் ஷாஜகான். "இன்ஸ்டாகிராமில் நான் பாடலைக் கேட்டவுடன், அதனைக் கவர் பாடலாக வெளியிட்டால் அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் என்று நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பாடலின் தமிழ் பதிப்பை உருவாக்கி அதை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார் அனஸ். இந்தப் பதிப்பு மிகுந்த கவனத்தைப் பெறத் தொடங்கியவுடன், சங்கீத் அனஸைத் தொடர்புகொண்டு, யோஹானியுடன் இணைந்து பாடலின் அதிகாரப்பூர்வ பதிப்பை உருவாக்க விரும்புவதாகக் கூறினார்.
"நான் மலையாளத்தில் பாடலை மீண்டும் எழுதினேன். யோஹானிக்கு மொழி தெரியாது என்பதால், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நான் அவருக்கு வார்த்தைகளைக் கற்பிக்க வேண்டியிருந்தது" என்று அனஸ் கூறினார்.
சிங்கள மொழியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ள அர்த்தம் வேறுபட்டாலும், அனஸ் பாடலின் கருப்பொருளைப் புரிந்து கொண்டதாகவும் அதன் அடிப்படையில் பாடல் எழுதியதாகவும் கூறினார். பாடலின் தமிழ் மற்றும் மலையாள பதிப்புகள் 2021 ஜூலை 26 அன்று சி மியூசிக் சவுத் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
"யோஹானியுடன் அனஸ் செய்த பதிப்பு ஒரு பெரிய வெற்றி. அவருடைய குரல் சிறந்த குரல். பாடலும் மிகவும் நன்றாக இருந்தது. ஏற்கெனவே இந்தப் பாடலின் தமிழ்ப் பதிப்பிற்கான கோரிக்கை யோஹானியின் சமூக வலைத்தள பக்கத்தில் நிறையக் குவிந்தன. மணிகே மகே ஹிதேவின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பைச் செய்ய அவரை அழைக்க என்னை இதுவே தூண்டியது” என்று சங்கீத் கூறினார்.
மில்லியன் கணக்கான வியூஸ்களுடன் இந்தப் பாடல் வைரலாகி பல்வேறு பாடகர்களின் பல பதிப்புகள் உள்ளன. சிலர் சிங்களப் பாடலை நேரடியாக இந்தி அல்லது பிற பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க விரும்பினர் மற்றும் சில கலைஞர்கள் தங்கள் சொந்த ட்விஸ்ட் மற்றும் அர்த்தங்களை அவர்களின் பாடலுக்கு வழங்கினர்.
புனேயைச் சேர்ந்த பாடகர்-ராப்பர் முசிஸ்டார்,கடந்த ஜூலை 30 அன்று இந்தி பதிப்பை வெளியிட்டார். இந்த பாடல் முசிஸ்டாருக்கு அவருடைய நண்பரால் அனுப்பப்பட்டது. இந்தப் பாடல் மீது ஏற்பட்ட காதலால் இந்தப் பாதிப்பை அவர் வெளியிட்டார்.
"பாடல் எழுதுவது கடினமான பகுதியாக இருந்தது. அதைச் செய்ய எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. பாடலின் யோஹானியின் பகுதிகளை அப்படியே வைத்துக்கொண்டு, ஆண் பகுதியை மட்டும் என் சொந்த எழுத்தால் மாற்றினேன்” என முசிஸ்டார் கூறினார்.
முசிஸ்டாரின் பதிப்பு இப்போது யூடியூப்பில் இருந்து அகற்றப்பட்டாலும், அவருடைய ஹிந்தி பதிப்பு பிரபலமானது. பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனை கூட அதனைப் பகிர்ந்திருக்கிறார். "லெஜெண்ட் அமிதாப் பச்சன் எனது பாடலின் பதிப்பைப் பகிர்ந்து கொண்டதை அறிந்ததும், கண்கள் கலங்கின. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்" என்று அவர் கூறினார்.
சாமத் சங்கீத் தனது பாடலில் இந்தியப் பதிப்புகளின் எண்ணிக்கையைப் பற்றி எப்படி உணர்ந்தார் என்று கேட்டபோது, "அவர்கள் என் பாடலை இந்த எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் கேட்ட வரையில், இந்தப் பாடல் சுமார் 75 பதிப்புகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன" என்றுகூறிப் பூரித்தார்.
"இந்த பாடல் இந்தி பதிப்பில் பல மொழிகளோடு உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்/மலையாளப் பாடலைத் தவிர அவை எதுவும் இந்தப் பாடலின் அங்கீகரிக்கப்பட்ட பதிப்புகள் அல்ல” என்று சங்கீத் கூறினார்.
பெரும்பாலான சமூக ஊடக பயனர்கள் தங்களுக்குப் பாடலின் மொழி அல்லது அதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும் பாடலுக்கு அடிமையாகிவிட்டோம் என்று ஒப்புக்கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த பாடகர்-இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத், மாணிக்கே மகே ஹிதே பாடலின் எளிமைதான் அவரை மிகவும் ஈர்த்தது என்கிறார். "இந்தப் பாடல் அனைவரையும் அணுகக்கூடியது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இது மிகவும் பொதுவாக அறியப்பட்ட மொழியாக இல்லாவிட்டாலும் வைரலாகி உள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த பாடல் போன்ற அணுகக்கூடிய இசையின் அழகு, மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கடந்து செல்கிறது என்று அவர் நம்பினார். "பாடலின் மெல்லிசை அமைப்பு மற்றும் நினைவுகூரப்பட்ட மதிப்பு காரணமாக இந்த பாடல் இன்னும் குறைவாக அறியப்பட்ட மொழியில் இருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்கிறது" என்று அம்ரித் கூறினார்.
அதிக கூட்டணிகள் தொடக்கம்
இந்தியாவில் மணிக்கே மகே ஹிதேவின் வெற்றியுடன், ‘இந்தப் பாடல் இந்திய மற்றும் இலங்கை கலைஞர்களிடையே அதிக கூட்டணிக்கு வழி வகுக்குமா?’ என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
அதற்கு, “இந்தியா எங்களுடைய அண்டை நாடு மற்றும் மிகவும் நட்பு பாராட்டும் நாடு என்பதால் எதிர்காலத்தில் இந்திய மற்றும் இலங்கை கலைஞர்களிடையே அதிக கூட்டணி இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நம் இலங்கை கலைஞர்கள் இதற்கு முன் இந்தியக் கலைஞர்களுடன் பணியாற்றி உள்ளனர். மணிகே மகே ஹிதே இன்று கலைஞர்கள் ஒன்றாக வேலை செய்வதற்கான சிறந்த சூழலை உருவாகியுள்ளது. இப்போதுதான் இந்திய ரசிகர்கள் சிங்களப் பாடல்களை நேசிக்கத் தொடங்கியுள்ளனர் என்று நினைக்கிறேன்" என சங்கீத் பகிர்ந்துகொண்டார்.
இந்தப் பாடலின் அதிகாரப்பூர்வ இந்தி பதிப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதை சமத் வெளிப்படுத்துகிறார் மற்றும் அதனுடன் தொடர் - விவாதங்கள் நடந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார். அனஸ் ஷாஜகான் மற்றும் சதீஷனைத் தவிர யோகானி யாருடனும் இணைந்து பாடவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
'மணிகே மகே ஹிதே' பாடல், தனது திறமைகளை வெளிப்படுத்த இன்னும் பல வழிகளை உருவாக்கியிருப்பதாக அவர் நம்புகிறார். "இந்த பாடலுக்கு முன்பே நான் சல்மான் அலி, ஹரிசரன், பிரகதி குரு பிரசாத் போன்ற இந்தியக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். மேலும், எதிர்காலத்தில் நீங்கள் அதிக கூட்டணிகளைக் காண முடியும்" என்று கூறி நிறைவு செய்கிறார் சங்கீத்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.