உற்பத்தி சார்ந்த துறைகளில் பணிபுரியும் ஆண்களுக்கு முடக்குவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உற்பத்தி சார்ந்த துறைகளில் பணிபுரியும் ஆண்களுக்கும், செவிலியராக பணிபுரியும் பெண்களுக்கும் மற்ற துறைகளில் பணிபுரிபவர்களை விட முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தெரியவந்துள்ளது.
மின் மற்றும் மின்னணு சாதன பொருட்கள் தயாரிக்கும் துறைகளில் பணிபுரியும் ஆண்களுக்கு முடக்குவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து, தொழில் முறை, நிர்வாகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஆண்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளை, கான்கிரீட் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முடக்குவாதம் ஏற்படுவதாற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிகம் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஆனால், உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களுக்கு முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், அதே துறையில் பணியாற்றும் ஆண்களைவிட குறைவாகவே இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்கலை கையாளுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, சிலிக்கா, ஆஸ்பெஸ்டாஸ், கரிம கரைசல்கள், மோட்டாரிலிருந்து வெளியேறும் நச்சு வாயு ஆகியவற்றை உற்பத்தி துறையில் பணியாற்றுபவர்கள் அதிகமாக கையாளுவதால், அவர்களுக்கு முடக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என ஆய்வு தெரிவிக்கிறது.
இவற்றின் மூலம், தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.