Simple Palaakkaai Biriyani Tamil : சாப்பாட்டைப் பொறுத்தவரை அசைவப் பிரியர்களுக்கு ஏராளமான சாய்ஸ் உண்டு. அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சைவப் பிரியர்களுக்கு ஏராளமான உணவு வகைகளை முயற்சி செய்துகொண்டு இருக்கின்றனர். அந்த வரிசையில் மட்டன் பிரியாணி சுவையில் பலாக்காயை வைத்து சுவையான சைவ பிரியாணி எப்படிச் செய்வது என்பதை இனி பார்க்கலாம்.
பி.கு : பிஞ்சு அல்லது பழுக்காத காயைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சிறிய அளவு கையில் கசப்புத்தன்மை அதிகம் இருக்கும்.
தேவையான பொருள்கள்:
பலாக்காய் பொரிப்பதற்கு:
பலாக்காய் - 1/4 கிலோ
மஞ்சள் தூள், உப்பு, தயிர், மிளகாய்த்தூள் - தலா1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
சாதத்திற்கு:
பாசுமதி அரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஷாஜீரா - 2 டீஸ்பூன்
ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 4
வதக்குவதற்கு:
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நீளமாகக் கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை:
பலாக்காயின் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் காய் பகுதியைச் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, அதோடு சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், தயிர் மற்றும் மிளகாய்ப்பொடி சேர்த்து எண்ணெய்யில் பொரித்தெடுத்து வைத்துக்கொள்ளவும்.
தாளிப்பிற்கு தேவையான பொருள்களைச் சேர்த்து, அதனை நன்கு வறுத்தெடுத்துக்கொள்ளவும். பிறகு, கழுவி ஊறவைத்த அரிசியை அதனோடு சேர்க்கவும். அரிசியை வறுக்கும்போது அதன் நிறம் மாறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சுமார் 5 நிமிடங்கள் வறுத்த பிறகு, இரு மடங்கு தண்ணீர் சேர்த்து அதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதனோடு, ஊற வைத்துப் பொரித்த பலாக்காய்களையும் சேர்த்துக்கொள்ளவும். இந்த மசாலா தயாரானதும், வேகவைத்த சாதத்தைச் சேர்த்தால் சுவையான பலாக்காய் பிரியாணி ரெடி.
திரும்பத்திரும்ப அடுப்பில் வைத்துச் சுண்டக் கிளறிச் சாப்பிடக்கூடாது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"