Nithya Ravindran : நித்யா ரவீந்தர் மூத்த திறமையான நடிகை. தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முக்கியமான, வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடுத்தர வர்க்க தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நித்யா ரவீந்தர், சென்னையில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவர்.
நித்யாவின் தந்தை 'மெட்ராஸ் அணு மின் நிலையத்தில்' அரசு ஊழியராகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தார்கள். அவரது தந்தைக்கு ஒரு நாடக குழு இருந்தது. அந்த குழு அரங்கேற்றும் நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நித்யா. இவருக்கு ஜெயஸ்ரீ, லட்சுமி என்ற இரண்டு தங்கைகளும், அக்கா கல்யாணியும் உள்ளனர். சென்னையின் ஸ்டெல்லா மாத்துடினா கல்வியியல் கல்லூரியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தனது முதன்மை கல்வியைப் பெற்றார் நித்யா.
ஆனால் வருகை பற்றாக்குறை காரணமாக 9-ம் வகுப்புக்கு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அதற்குள் திரைப்படங்களில் பிஸியாகிவிட்டதால், ஒன்பதாம் வகுப்போடு படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டது. 1969-ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ’குருத்திக்களத்தில்’ குழந்தை நட்சத்திரமாக நித்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து பின்னர் கதாநாயகி ஆனார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழ் திரைப்படங்களில் கேமராமேனாக பணியாற்றிய ரவீந்திரனை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.
அலைபாயுதே, பம்மல் கே சம்பந்தம், உத்தமபுத்திரன் போன்ற பல தமிழ் படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். ’நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்’, ‘உதிரி பூக்கள்’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ள நித்யா, தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ’மின்னலே’, ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை உலகில் மிக முக்கியமானவராக கருதப்படும் இவர், சினிமாவில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.