புகைபிடித்தால் நுரையீரல் புற்றுநோய், மன அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது நமக்கு தெரியும். இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான முயற்சியில் 10 பேரில் 9 பேர் தோல்வி அடைகின்றனர் என ஒரு சர்வே சொல்கிறது. ஆனால், நிச்சயம் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றுமொரு காரணத்தை கூறுகின்றனர். புகை பிடித்தால் பார்வை திறன் பறிபோகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இதனால் ஏற்படும் பார்வைத்திறன் குறைபாட்டை சரிசெய்ய முடியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களை விட புகை பிடிப்பவர்களுக்கு அதிகம் உள்ளது என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் அல்லது புகையிலையை வேறு எந்த வடிவில் உபயோகித்தாலும் 5 முதல் 10 வருடங்களில் கண் நரம்புகள் பாதிக்கப்படும் எனவும், அதனால் பார்வை திறன் முற்றிலும் பறிபோகும் எனவும் எச்சரிக்கின்றனர்.
“புகைபிடித்தால் கண் பார்வை குறைபாடு ஏற்படும் என்பது குறித்து மக்களுக்கு பெரிதாக தெரிவதில்லை. அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை”, என எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் அதுல் குமார் கூறினார்.
புகைபிடிப்பவர்களுக்கு ஆக்ஸி ஹீமோகுளோபின் அளவு குறைந்து விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கான ஒரே வழி புகையிலை பழக்கத்தை ஒழித்தலே என மருத்துவர் அதுல் குமார் கூறினார்.