பவித்ரா ஜனனி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். பவித்ரா ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்,
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கொல்லிமலை, ஆகாயகங்கை, சதுரகிரி என பல இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இப்போது பவித்ரா அகஸ்தியர் மலைக்கு டிரெக்கிங் சென்ற போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், ‘அகஸ்தியர் மலை டிரெக்கிங்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்கு சென்றேன்.
இது மறக்கமுடியாத, அற்புதமான மலையேற்றம்’, என்று மகிழ்ச்சி பொங்க அதில் பதிவிட்டுள்ளார்.
இங்கே பாருங்க.
அகஸ்தியர் மலை
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பாபநாசம் மலைக்கு மேலே உள்ளது பொதிகை மலை. இது ஆனைமலையின் தொடர்ச்சியாகவும், மகேந்திரகிரி, பாபநாசம் மலைகளையும், முண்டந்துரை காடுகளையும், கேரளாவின் சில காடுகளையும் கொண்டுள்ளது.
கேரள வனத்துறை சார்பில் பொதிகை மலையில் ஏற அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு பத்துபேர் கொண்ட குழுவாக மட்டுமே மலையேற முடியும். திருவனந்தபுரத்தில் உள்ள வன அலுவலகத்தில் அகத்தியர் கூடத்தில் மலையேற்றம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. வனத்துறை ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாட்கள் பொதிகை மலையில் ஏறலாம்.
ஒவ்வொரு ஆண்டும் அகஸ்தியரைத் தரிசிக்கக் கேரள அரசு ஜனவரி மாதத்தில், 40 நாட்கள் அனுமதி வழங்குகிறது.
தமிழகத்தின் பாபநாசம் வழியாக இந்த பயணத்திற்கு 2006 வரை வனத்துறை அனுமதியளித்து வந்தது. புலிகளுக்கு பாதிப்பு என்பதால் அதன்பின்னர் யாரையும் பாபநாசம் வழியாக அனுமதிப்பதில்லை, தமிழகத்தில் பாபநாசம் வழியாக வரும் பக்தர்கள் சங்குமுத்திரை வழியில் வந்து கேரள பக்தர்களோடு சேர்வார்கள்.
சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு பகுதியில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் என்ற சுனை இருக்கிறது. இங்குத் தாமிரபரணியின் அழகைப் பார்த்து மகிழலாம்.
பொதிகை மலை யாத்திரைக்கு காட்டிற்குள் மட்டும் 3 நாட்கள் இருக்கவேண்டியிருக்கும். முதல் நாள் 16 கிமீ நடக்க வேண்டும், இரண்டாம் நாள் ஏற 6, இறங்க 6 என மொத்தம் 12 கிமீ நடக்க வேண்டியிருக்கும். மூன்றாம் நாள் திரும்பி செல்ல 16 கிமீ நடக்க வேண்டியிருக்கும்!
செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் இரும்புக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு, மிகவும் கவனத்துடன் ஊன்றி நிதானமாக ஏறிச் சென்றால், 1868 மீட்டர் உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை நாம் அடையலாம். இங்குள்ள குட்டையான அழகிய சோலையில் மாமுனிவர் அகத்தியர் காட்சி தருகிறார்!
ஆன்மிகம், மலையேற்றம் விரும்பும் எவரும் வாழ்வில் ஒருமுறையாவது இங்கு சென்று, அகத்தியரை தரிசித்து வாருங்கள்,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“