மஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாகச பெண்மணி ஒருவர், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
புனேவை சேர்ந்த சீத்தல் ரானே மகாஜன், சாகசங்கள் புரிவதில் ஆர்வம் உள்ளவர். இவர் சமீபத்தில் தாய்லாந்தில் சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சீத்தல். அதிலும், 13,000 அடியில் விமானத்திலிருந்து இத்தகைய சாதனையை புரிந்திருக்கிறார் இவர். மேலும், இரண்டு முறை அதேபோன்று சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தார் சீத்தல் ரானே.
இதுகுறித்து சீத்தல் கூறியதாவது, “மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால்தான், மஹராஷ்டிராவின் பாரம்பரிய உடையான ‘நவ்-வாரி’ சேலையை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தேன்”, என தெரிவித்தார். மேலும், “சேலையை கவனமாக அணிந்துகொண்டு, பாதுகாப்பு உபகரணங்கள், தொடர்பு சாதனங்கள், தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி, ஷூ ஆகியவற்றை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தது கொஞ்சம் சவாலாக இருந்தது.”, என கூறினார்.
மேலும், ஸ்கை டைவிங் செய்வதற்கு முன்பு சேலையில் நிறைய இடங்களில் ஊக்குகள் கொண்டு பாதுகாப்பாக அணிந்துகொண்டதாகவும், அதன்மூலம் ஸ்கை டைவிங்கின்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் சீத்தல் தெரிவித்தார். “தினசரி வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், சேலை அணிந்துகொண்டு இத்தகைய சாகசங்களையும் பெண்களால் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கவே நான் இதனை செய்தேன்”, என சீத்தல் தெரிவித்தார்.
சீத்தல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்கைடைவிங்கில் 18 தேசிய மற்றும் 6 சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 704 முறை ஸ்கைடைவிங் செய்துள்ளார் சீத்தல். எவரெஸ்ட் சிகரத்தில் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பதே இவருடைய நெடுநாள் கனவாகும்.