ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.
தற்போது இவர், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயக்கி உள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜாவுடன் பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்களை ரம்யா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா சாருடன் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.
பல கேள்விகளைக் கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு, எல்லா பதில்களையும் வழங்கிய வழிகாட்டி, உண்மையிலேயே ஒரு லெஜன்ட்- ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்துவிட்டு, குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தத் தொடங்கியிருப்பது அவரது கலையின் மீதான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
சினிமா மீதான அவரது காதலும் ஆர்வமும் நம்மை தொற்றிக்கொள்ளும் மற்றும் ஊக்கமளிக்கும். விலைமதிப்பற்ற உரையாடல்கள்.
விலைமதிக்க முடியாத தகவல்களுக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா!என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜா கடந்த 1977-ம் ஆண்டு ரஜினி கமல் நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள். டிக் டிக் டிக். புதிய வார்ப்புகள். கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்கயை இயக்கினார்.
இவர் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நலம் தேறியதும், இப்போது மீண்டும் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“