அந்தச் சாலுக்கு அருகே கல் விட்டெறியும் தூரத்தில், மெட்ரோ ரயில் பணிக்காக ஓய்வே இல்லாமல் பூமியை துளையிடும் வேலை, தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. 88 வயதான நெற்றி சுருங்கிய நாராயண் லாவடே வீட்டில், நாம் பேசி முடிக்கும் வரையிலும் அந்த பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. "இந்த ரயில் நிலையம் வருவதற்குள் நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை" என்கிறார் நாராயண்.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, நாராயணும் அவரது 78 வயது மனைவியுமான ஐராவதியும், "நாங்கள் படுக்கையில் முற்றிலுமாக வீழ்வதற்கு முன்போ அல்லது முதுமை காரணமாக படுத்த படுக்கையாகி இறப்பதற்கு முன்னதாகவே எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்" என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால், அவர்கள் கடிதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதம் மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்பது எங்களுக்கு தெரியும் என்கிறது இந்த தம்பதி. "நாங்கள் 2019ம் ஆண்டை பார்ப்போம் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால், நான் யூகித்தேன்" என்கிறார் நாராயண்.
மும்பை மாநகரத்தின் லக்ஷ்மி பாய் சாலில் உள்ள வீட்டில் 75 வருடங்களாக நாராயண் வசித்து வருகிறார். 51 வருடங்களுக்கு முன்பு அவரை ஐராவதி திருமணம் செய்து கொண்டார். மாநில போக்குவரத்துக் கழகத்தில் நாராயண் வேலை பார்க்க, ஆர்யன் கல்வி சமூக உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக ஐராவதி பணிபுரிந்தார். மும்பை மாநகரத்தின் மாற்றங்களை பல்வேறு கட்டங்களில் இந்த தம்பதி பார்த்துள்ளனர்.
டிராம் வண்டியில் தலைக்கு 10பைசா டிக்கெட் என்ற நிலை முதல் 1964ல் டிராம் சேவை இழுத்து மூடப்பட்டது வரையிலும், அதன் பிறகு பேருந்துகள் வரத் தொடங்கி, CNG பேருந்துகளாக மாறி, இப்போது எலக்ட்ரிக் பேருந்துகளாக உருமாறியது வரையிலும், டாக்ஸி முதல் உபெர் வரையிலும், இப்போது மெட்ரோ ரயில் வரையிலும் என ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்தையும் இந்த தம்பதி கடந்து வந்திருக்கிறது.
ஆனால், இப்போது உள்ள மும்பையின் நிலை கண்டு இவர்கள் வேதனைப்படுகின்றனர். ஐராவதியின் மாலை நேரத்து பயணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதுகுறித்து ஐராவதி கூறுகையில், "நீல வண்ண தடுப்புகளில் 'மும்பை மேம்படுத்தப்படுகிறது' என்று எழுதி, எங்கள் சாலுக்கு வெளியே சாலை முழுவதும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். நான் தினமும் மாலை கல்பாதேவியில் உள்ள ராம் கோவிலுக்குச் செல்வேன். ஆனால், இப்போது சாலைகள் தோண்டப்படுகின்றன. நடைபாதை இல்லை. நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது" என்கிறார்.
அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள இரு சால்கள் விரைவில் தரைமட்டமாக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால், மும்பை சென்ட்ரலில் உள்ள தனது பழைய அலுவலகத்திற்கு தினம் பிற்பகலில் செல்வதை நாராயணும் நிறுத்திவிட்டார். அவர், "டிராஃபிக் மிகக் கடுமையாக உள்ளது" என்கிறார். ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் இங்கு மாறவில்லை. எங்கள் சாலில் தினம் காலை 5-6 மணி வரை மட்டுமே தண்ணீர் வரும். அந்த நிலை மட்டும் மாறாமல் இப்போதும் தொடருகிறது என்றார் வேதனையுடன்.
நாராயண், தினம் ஐந்து செய்தித்தாள் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். மராத்தி, ஆங்கிலம் என செய்தித்தாள்கள் படித்து தன்னை அப்டேட்டாக வைத்திருக்கிறார். 88 வயதாகியும் அவர் கண்ணாடி அணியும் தேவையே வரவில்லை. ஒவ்வொரு மாலையும் டிவி பார்ப்பது ஐராவதியின் வாடிக்கை.
கருணைக் கொலை செய்யுமாறு அவர்கள் கடிதம் எழுதியதிலிருந்து, பல NGO-க்கள் தொடர்பு கொண்டு, 'நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறோம்' என கேட்டிருக்கின்றனர். இருவரும் மறுத்துவிட்டனர்.
"நாங்கள் யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை. அதனால் தான் எங்களுக்கு குழந்தையும் இல்லை" என்று கூறுகிறார் ஐராவதி. ஆனால், இப்போது தெருவில் நடந்து செல்லக் கூட, எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது என்கிறார்.
தினம் காய்கறி வாங்கிக் கொடுத்து, வீட்டை சுத்தம் செய்து தருகிறார் ஒரு பணிப்பெண். ஐராவதிக்கு மாதம் 25,000 ரூபாய் பென்ஷன் வருகிறது. அதில், தினம் 500 ரூபாய் செலவு செய்கின்றனர். பல விஷயங்களில் இந்த தம்பத்திக்குள் முரண்பாடு உள்ளது, குறிப்பாக, யார் டிவி ரிமோட்டை வைத்திருப்பது என்று!. ஆனால், அவர்கள் இருவரும், ஒரு விஷயத்தில் ஒத்துப் போகின்றனர், "பாதசாரிகளுக்கு இடம் வேண்டும்" என்று!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.