சீனா விவசாயி ஒருவர் தனது சிறுவயதில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனதால் தானே சொந்தமாக ஒரு விமானத்தை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
வடகிழக்கு சீனா பகுதியை சேர்ந்தவர் ஜூ யூ. இவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விளைச்சல் செய்யும் விவசாயியாக இருந்து வருகிறார். ஜூ யூவுக்கு சிறு வயதிலிருந்தே தனக்கென்று சொந்தமாக ஒரு விமானம் வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை ஆணித்தரமாக பதிந்திருந்தது. ஆனால் இதுவரை அது நிரைவேறாத காரணத்தால் அந்த ஆசை பின் நாட்களில் ஏக்கமாக மாறியது.
சீனா விவசாயி ஜூ யூ விமான ஆசை
பள்ளிப்படிப்பு மட்டுமே படித்துள்ள ஜூ, பல வருடங்களாக விமானம் வாங்க வாய்ப்பு வருமா என்று காத்திருந்தார். ஆனால் சந்தர்பங்கள் கைக்கொடுக்காத காரணத்தால், இனியும் பொறுத்திருந்தால் ஆசை நிறைவேறாமல் போகும் என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார். ஜூவின் அந்த முடிவு சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால் பின் நாட்களில் அவர்களே ஆச்சரியத்தில் உரைந்தனர்.
விவசாயம் செய்துக் கொண்டிருந்த போதே சீனாவில் உள்ள கையூன் என்ற பகுதியில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெல்டிங் வேலையும் செய்து வந்திருந்தார் ஜூ. எனவே இவருக்கு வெல்டிங் வேலையெல்லாம் அத்துபடியாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வயது கூடிக் கொண்டே செல்ல இவரின் விமானம் ஆசையும் அதிகரித்தது. எனவே காத்திருந்தால் கனவு நிறைவேறாது, களத்தில் இறங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தார்.
வெல்டிங் வேலைக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் முதலில் வாங்கி வந்தார். பின்னர் பல விமானங்களின் புகைப்படங்களை சேகரித்து விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நடத்தினார். அதன் பின்பு, சொந்தமாக விமானத்தை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தனக்கு சொந்தமான கோதுமை விவசாய நிலத்தை விமான உருவாக்க சீர் செய்தார். படர்ந்த சுத்தமான இடமாக அந்த நிலத்தை மாற்றினார். இதுவரை அவர் சேகரித்து வைத்திருந்த 3,74,000 அமெரிக்க டாலர்களை கொண்டு சுமார் 60 டன் இரும்பு, மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கினார். படிப்படியாக விமானத்தை உருவாக்கத் தொடங்கினார்.
ஜூவின் மன உறுதி மற்றும் தீராத கனவை கண்டு வியந்த அவரின் 5 நண்பர்கள் இவருக்கு உதவினார்கள். விடாமுயற்சியுடன், நேரம் காலம் பார்க்காமல் உழைத்த ஜூ யூ அவரது சொந்த விமானத்தை பிரம்மாண்டமாக கட்டி முடித்தார்.
இது குறித்து சர்வதேச பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததால் என்னால் விமானத்தில் பயணிக்க முடியாது என நான் உணர்ந்தேன். விமானத்தில் பறக்க முடியாவிட்டாலும் என்னால் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்க முடியும் என்று நம்பி இதைச் செய்துள்ளேன்.
என் விமானம் அரைகுறையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாகப் பறக்காது. இதை நான் உணவகமாக மாற்ற உள்ளேன். என் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பேன். இங்கு வரும் அனைவரும் தங்களை ஒரு எஜமானர்கள் போல் உணர வேண்டும். என் விமானம் பசியால் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இடமாக விரைவில் மாறும்” என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
விமானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு கையில் பணம் இருந்தபோதும், சொந்த விமானத்தில் தான் பயணிப்பேன் அதையும் நானே உருவாக்குவேன் என்ற இவரின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பின் நாட்களில் இவரது விமானம் ஏழைகளின் உணவு விடுதியாக மாறும் என்ற வார்த்தையை கேட்டு பெறுமை கொள்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.