தமிழ்நாட்டில் இருளர் காட்டு நாய்க்கர், மலையாளி உள்ளிட்ட 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் காடர், மலை மலசர், முதுவார் உள்ளிட்ட 13 பழங்குடியின இனங்களின் மொத்த மக்கள் தொகை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
ஒவ்வொரு பழங்குடியினரும் ஒரு தனித்துவமான மொழியை பேச்சு வழக்கில் கொண்டுள்ளனர்.
பழங்குடிகளின் மொழிகள்’ பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன.
ஆனால் அந்த மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருப்பதாலும், எழுத்து வடிவில் இல்லாததாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.
மேலும் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடப்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிவுக்கு காரணமாக உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விழிம்பில் உள்ள பழங்குடியினர் மொழிகளை பாதுகாக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், பழங்குடியின செயற்பாட்டாளர்கள் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ’மொழிப்பெட்டி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
இந்தப் பள்ளியில் குறும்பர் மற்றும் இருளர் பழங்குடியின மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர்.
இந்த மொழிப்பெட்டியில் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களது மொழியில் இருந்து ஒரு வார்த்தையை தெரிந்து கொண்டு – ஒரு காகிதத்தாளில் எழுதிக் கொண்டு வந்து அவரவர் பெயரெழுதி போட வேண்டும்.
மாதமொரு முறை ஆசிரியர் அல்லது பழங்குடி இளைஞர்கள் அப்பெட்டியை திறந்து - அதிகமாக வார்த்தைகளை எழுதிய மாணவர்களுக்கு பரிசுகள் வழஙகுவார்கள்.
ஆண்டு இறுதியில் இருளா, குரும்பா மொழிகளுக்கென அகராதிகள் குழந்தைகள் பெயரில் அச்சுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.