விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு 2019 : சித்திரை மாத சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது. மேலும் சித்திரை மாதப் பிறப்பை ‘சைத்ர விஷூ புண்ணிய காலம்’ என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள். சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை ‘வசந்த ருது’ என்பார்கள்.
சூரியன் இம்மாதத்தில் தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.
விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு 2019
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து கோவில்களுக்குச் சென்று எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர்.
மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.
கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர்.
மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.