பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.
Advertisment
சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.
இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சை சிகரம் வரிகளில், தஞ்சை செல்வா என்பவர் இசையமைக்க, தஞ்சை செல்வி என்பவர் பாடியிருக்கும் 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' எனும் கிராமிய பாடலை செந்தில் – ராஜலட்சுமி தம்பதி தயாரித்துள்ளனர்.
கிராமியப் பாடல்கள் மூலம் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வருமானத்தோடும், புகழோடும் வலம் வரும் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி, புதிய கிராமிய பாடகர்களுக்கும் அடையாளம் ஏற்படுத்தும் விதமாக பல உதவிகள் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இப்பாடலை இருவரும் தயாரித்துள்ளனர்.