ராஜலட்சுமி
முன்பெல்லாம் திருமணமான அடுத்த மாதத்திலிர்ந்தே ‘இந்த மாசம் குளிச்சியா?’ என்ற கேள்வி எழத் தொடங்கிவிடும். இரண்டு, மூன்று மாதங்கள் ஆனால், இன்னும் மாசாமாசம் குளிச்சிட்டுதான் இருக்கியா என்று கேட்டுக் குற்ற உணர்வை ஏற்படுத்துவார்கள். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. கல்யாணமாகி முதல் ஆண்டில் குழந்தை பிறந்தால்தான் அதிசயம் என்னும் நிலை உருவாகிவிட்டது. காரணம், இளம் தம்பதியர் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட விரும்புவதுதான்.
இப்போதெல்லாம், நகர்ப்புறங்களில் படித்து வேலைக்குப் போகும் பெண்களும் ஆண்களும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், சம்பாதித்து, வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணிக்கொண்டிருப்பார்கள். வீடு, நகை, ஏ.சி., கார் எல்லாம் வாங்குவார்கள். ஆனால், குழந்தை மட்டும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
‘என் கொழந்த ஸ்கூலுக்கு சொந்த வீட்லேந்து கார்லதான் போகும். அந்த அளவுக்கு எங்களோட ஸ்டேட்டஸ ஏத்திகிட்டுதான் கொழந்தைய பெத்துகறத பத்தி யோசனை பண்ணுவோம்’ என்று சிலர் நினைக்கலாம். நல்ல வேலையில் இருக்கும் பெண்கள், ‘எங்களுக்கு கொழந்த பிறந்தப்புறம் நான் வேலையை விட்டுட்டு கொழந்தையைப் பாத்துக்கறதுக்கு வீட்ல இருக்கணும். நிறைய சேவ் பண்ணினப்புறம்தான் கொழந்தைய பெத்துக்கறதா இருக்கோம்’ என்றும் பிளான் பண்ணுவார்கள்.
‘ஓ மை காட், என் ஃபிரென்ட் ஒருத்தி, காலேஜ்ல ப்யூட்டி கான்ட்டஸ்ட்ல கலந்துப்பா. ஆனா கல்யாணம் ஆகி ஒரு கொழந்த பொறந்தப்புறம் பீப்பாய் மாதிரி ஆயிட்டா. அவ நிலம எனக்கு வந்தா நான் செத்தே போயிடுவேன்’ என்ற பிரமையில் இருப்பவர்களும் உண்டு.‘எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நெலமைக்கு நான் வந்திருக்கேன். இப்போ போய் குழந்தைப் பெத்துகிட்டா என்னோட கரியரே போயிடும். அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்’ என்று சொல்பவர்களும் உண்டு.
உண்மையில் என்ன செய்ய வேண்டும்?
குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவதற்கு இவர்கள் பின்பற்றும் முறைகளால் பல உடல் ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம். ஒருவேளை இவர்கள் தயாராக இருக்கும்போது இவர்கள் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம். எனவே, தள்ளிப்போடுவதற்குப் பிளான் பண்ணுவதை விட்டு விட்டு, குழந்தை பெற்றுக்கொண்டு என்ன செய்யலாம் என்று பிளான் பண்ணுவதே சிறந்தது.
முதல் குழந்தையைப் பிரவித்த பெண்களுக்கு கணவருடன் எவ்வளவு நாட்களுக்குப் பிறகு சேர்ந்து இருக்கலாம்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பன போன்ற நிறைய சந்தேகங்கள் எழும். தாய் வீடுகளில் இருந்துவிடும் பெண்களுக்கு இந்தக் கவலை இல்லை. ஆனால், வெளி ஊர்களில், வெளிநாடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எழும்.
குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள் கணவன் உங்களை நெருங்கினால், ஒரேயடியாக மறுத்துவிட வேண்டும். குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் தாராளமாக உங்கள் கணவருடன் நீங்கள் இணையலாம். ஆனால் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்திருந்தால், மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். டாக்டர்களின் ஆலோசனை கேட்டு அதற்குப் பின்னரே ஒன்று சேரலாம்.
தாம்பத்தியத்தில் ஈடுபாடு
பெண்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்திற்கு தாம்பத்தியத்தில் அதிகமான ஈடுபாடு இருக்காது. ஆனால், இது உங்கள் கணவரை அதிருப்திக்கு ஆளாக்கி உறவில் விரிசல் எற்பட வாய்ப்பு உண்டாக்கும் என்பதால், மன ரீதியாக அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்வது நல்லது.
தாயாகி விட்டோம் அப்புறம் என்ன என்னும் மனோபாவமே கூடாது. பெண்கள் தங்கள் அழகிலும், ஆரோக்கியத்திலும், கட்டுடல் பராமரிப்பிலும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். கணவருடன் போதிய நேரம் செலவிடவும் வேண்டும். மன இணக்கமே மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.