இன்று உலக நீரிழிவு தினம். இந்தியாவில் 70 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பலவித நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன. கண் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, காசநோய் உள்ளிட்டவை. அதனால், நீரிழிவு நோயிலிருந்து உங்களை காத்துக்கொள்ள இந்த 8 வழிகளை பின்பற்றுங்கள்.
1. உங்கள் குடும்பத்தினருக்கு நீரிழிவு இருக்கிறதா?
உங்கள் குடும்பத்தினர் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இருப்பினும், முறையாக உங்கள் உடல் நலத்தையும், உடல் எடையையும் கவனித்து வந்தால், நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்கலாம்.
2. வாழ்வியல் முறையில் மாற்றம்:
துரித உணவுகள், கொழுப்பு உணவுகள், காற்றடைக்கப்பட்ட பானங்கள், ஒழுங்கற்ற உணவு முறைகள், உள்ளிட்டவை நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. அதேபோல், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை 5 மடங்கு அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதனால், முறையான உணவுபழக்கம், உடற்பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும்.
3. உடல் பருமன்:
உடல் எடை அதிகமாக இருந்தாலும், நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. 90 செ.மீ. உயரம் கொண்ட ஆண்கள் மற்றும் 80 செ.மீ. உயரம் கொண்ட பெண்கள் 22.9/கி.கி/எம்2 என்றளவில் பி.எம்.ஐ. கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
4. உணவு பழக்கம்:
உணவை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். மேலும், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவை சரிவிகிதத்தில் நமது அன்றாட உணவில் கலந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், நீண்ட நேரம் வெறும் வயிறுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும், காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.
5. தினசரி உடற்பயிற்சி:
நடை பயிற்சி, யோகா என எந்த வடிவத்திலாவது தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் ஆபத்துதான். அலுவலகத்திலும் சிறியளவில் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது அவசியம்.
6. நல்ல தூக்கம்:
உணவு, உடற்பயிற்சி தவிர்த்து 7-8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். இரவில் நீண்ட நேரம் கழித்து தூங்குதல், காலையில் தாமதமாக எழுந்திருத்தல் ஆகியவை நீரிழிவு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
7. மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்தல்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனாலும், நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அதனால், மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்தல் அவசியம்.
8. மருத்துவரிடம் முறையாக பரிசோதித்தல்:
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை முறையாக பரிசோதித்து அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுங்கான கால இடைவேளையில் மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளுதல் அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.