Advertisment

உங்களுக்கு பசுமையான தளிர்கள் தெரிகிறதா?

நிதி அமைச்சகம் நல்லது நடக்கும் என நம்புவதாக இருந்தால், ஏன் அதனால் ஒரு நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2020- 21ல் கணிக்க முடியவில்லை. நிதியமைச்சகத்துக்கு தைரியம் இல்லையா!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
p chidambaram, india economy, india economy covid-19, ப.சிதம்பரம், economic revival, india gdp, ஜிடிபி, கொரோனா வைரஸ், இந்திய பொருளாதாரம், gdp 2020-21, covid impact on economy, farmers, ministry of finance

p chidambaram, india economy, india economy covid-19, ப.சிதம்பரம், economic revival, india gdp, ஜிடிபி, கொரோனா வைரஸ், இந்திய பொருளாதாரம், gdp 2020-21, covid impact on economy, farmers, ministry of finance

ப.சிதம்பரம், கட்டுரையாளர்

Advertisment

சிலருக்கு தெளிவான பார்வை இருக்கும். சிலருக்கு கூடுதலான சிறந்த பார்வை இருக்கும், அவர்கள் தீர்க்கதரிசி ஆவார்கள். அவர்கள் சாதாரண மனிதர்களால் சிந்திக்க முடிந்ததைவிட கூடுதலாக சிந்திப்பார்கள். சிலர் அதைவிட சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் முனிவர்கள் ஆவார்கள். அவர்களால் எதிர்காலத்தில் நடப்பதை கூட முன்னதாகவே சொல்ல முடியும். அது சராசரி மக்களால் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

நான் என்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூறுகிறேன். நீங்கள் உங்களை சுற்றி நடப்பதுடன் அவற்றை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். சென்னை போன்ற பெரிய நகரத்தில், எல்லாம் திறந்திருக்கிறது. பின்னர் அனைத்தும் திடீரென மூடப்படுகிறது. இது ஊரடங்கு, ஊரடங்கு தளர்வு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றிற்கு இடையே ஊசலாடிக்கொண்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்ன, எப்போது திறந்திருக்கும் அல்லது மூடப்பட்டிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பணக்காரர்களும், உயர் நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டில் இருந்தே தங்களின் செல்வம் அல்லது சேமிப்பில் வாழ்கிறார்கள் மற்றும் இந்த பிரச்னைகள் அனைத்தும் விரைவில் முடிய வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் இது எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே உள்ள மக்கள்தான், தங்கள் பணியிடங்களுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள், அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியில் சென்று உடனடியாக வீடு திரும்பிவிடுகிறார்கள். இங்கு நிலவும் உணர்வு பயமாகும்.

ஏழைமக்கள், குறிப்பாக கடைகளில் வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் மற்றும் தச்சர்கள், பிளம்பர்கள் அல்லது எலெக்டீரிசியன் போன்றவர்கள் கட்டாயத்தில் வெளியே சென்று வேலை தேடுகிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வேலை கிடைக்கிறது. வழக்கத்தைவிட 50 சதவீதத்திற்கும் குறைவான வருமானத்துடனே வீடு திரும்புகிறார்கள். இங்கு நிலவும் உணர்வு விரக்தியாகும்.

மிக ஏழ்மை நிலையில் இருப்பவர்களே பேரழிவை சந்தித்துள்ளனர். அவர்கள் வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றார்கள். பின்னர் வேலையின்றி தங்கள் கிராமங்களுக்கு திரும்பினார்கள். அவர்களை இன்னும் உயிருடன் வைத்திருக்கும் இரண்டு விஷயம் ஒன்று ரேஷன் பொருட்கள், மற்றொன்று மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம். இரண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்கள். ஆனாலும், பெரும்பாலானோர் தொண்டு நிறுவனங்களை சார்ந்து உள்ளனர். இவர்களிடம் நிலவும் உணர்வு அரசின் மீதான வெறுப்பும், விதியின் மீதான சாடலும்தான். சிறு நகரங்களில் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு கடைகள் மற்றும் சேவைகள் நன்றாகவே கிடைக்கின்றன. காய்கறி, பழங்கள், கறி மற்றும் மீன் கடைகள் மட்டுமின்றி, செருப்பு கடைகள், துணிக்கடைகள், சலூன்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

விவசாயம் ஒளிர்கிறது

கிராமப்புற இந்தியா முற்றிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெகு சிலர் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள். ஏராளமான அறுவடை நடைபெற்றுள்ளது. ரபி பருவ பயிர்கள் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது. விதைக்கும் காலமும் துவங்கிவிட்டது. அங்கு மகிழ்ச்சியான முகங்களே தெரிகின்றன. தேவையான மற்றும் பிரதானமான பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். அதை கடந்து ஒன்றையும் அவர்கள் வாங்கவில்லை. அவற்றுள் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், சத்துணவு பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள் முக்கியமானவை. பணக்கார விவசாயிகள் டிராக்டர் மற்றும் வேளாண்மைக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய ரக கார்கள் (மற்ற கார்கள் இல்லை) விற்பனை நன்றாக துவங்கியுள்ளது. வணிகத்துக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கான தேவை, இந்த வாகன விற்பனையை தூண்டியுள்ளது. இந்த தொடர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுதான் பெரும்பிரச்னையாக உள்ளது.

வழங்கல் சங்கிலி மீட்டெடுக்கப்படுகிறது, ஜிஎஸ்டி போன்ற சில சிக்கல்கள் உள்ளன. 2020-21ல் விவசாயம் நன்றாக இருக்கும். நன்றாக உள்ளது என்பதன் அர்த்தம் 4 சதவீத வளர்ச்சி இருக்கும். அது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.60 சதவீத பங்களிப்பு செய்யும்.

ஆனால், மற்ற இடங்களில் இருள் சூழ்ந்துள்ளது

ஆனால், எங்கும் இருளும், நிச்சயமற்ற தன்மையும் சூழ்ந்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்வோர் அரசால் கைவிடப்பட்டதுபோல் உணர்கிறார்கள். நிதியமைச்சர் அவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் 45 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என வாக்களித்துள்ளார். செயல்படாத சொத்துக்களின் அளவு 10 சதவீதம் இருப்பதாக அனுமானித்துக்கொண்டால், அது ரூ.30 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு சமமாகும். ரூ.70 ஆயிரம் கோடி மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். அது ஒருவேளை நிரந்தரமாக இருக்கலாம். சுற்றுலா, டிராவல்ஸ், விமான நிலையம், பேருந்து போக்குவரத்து, சேவைத்துறை உணவகம், கட்டுமானம், ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் பொருட்கள் என அனைத்து துறைகளும் மோசமடைந்துவிட்டது. அதில் பெரும்பாலானோர் கோடிக்கணக்கான ரூபாய் அளவு பேரிழப்புகளை சந்தித்துள்ளனர். சிலர் தொழிலே திவாலாகக்கூடிய நிலையில் உள்ளனர். லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகள், இந்த தோற்றுப்போன வியாபாரங்களுடனே அழிந்துவிட்டன. பெரும்பாலான நிறுவனங்கள் கடன் குறைப்பு மற்றும் முதலீட்டு செலவில் வெட்டும் அறிவித்துவிட்டனர்.

தேவை இன்னும் பரிதாபகரமான அளவில் குறைந்துவிட்டது. அது உற்பத்தி மற்றும் சேவைகள் துறையை கடுமையாக பாதிக்கிறது. மக்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். கடந்த ஆண்டைவிட பணசுழற்சி 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கோவிட் தொற்று ஏற்படும் என்ற அச்சம் மற்றும் மருத்துவமனை செலவுகள். மற்றொன்று, சீனாவின் அச்சுறுத்தல். கோவிட் அச்சம் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் இரண்டுமே 42 ஆண்டுகளில், 2020 – 21ல் இந்திய பொருளாதாரத்தை மந்தநிலையை நோக்கித்தள்ளும். இது 5 சதவீதம் வரை இருக்கும். மந்தநிலை என்பதன் அர்த்தம் அதிகளவிலான வேலையின்மை (நகரம் தவிர, வேலை, அதிகளவில் மனிதனால் இயக்கப்படும்) மற்றும் கூலி அல்லது வருமானம் குறையும். தனிநபர் வருமானம் 10 முதல் 12 சதவீதம் வீழ்ச்சியடையும். வறுமைக்கோட்டுக்கு அருகில் வாழ்பவர்கள், வறுமைகோட்டுக்கு கீழ் தள்ளப்படுவார்கள்.

இன்னும் ஒப்பந்தத்தில் உள்ளது

நிதியமைச்சகம் கோதுமை கொள்முதலில் பசுந்தளிர்களை பார்க்கிறது (382 LMT), காரீப் பருவ விதைப்பு (13.13மில்லியன் ஹெக்டேர்), ரசாயன உரங்கள் விற்பனை மற்றும் இருப்பு (507 பில்லியன் டாலர்). மற்றவை உற்பத்தி மற்றும் சேவைகள் சுருங்கியது குறித்த தகவல், இதன் மூலம் கடந்த ஆண்டைவிட வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உற்பத்தி 27.4 சதவீதம், சேவைகள் 5.4 சதவீதம், மின் நுகர்வு 12.5 சதவீதம், பெட்ரோல் நுகர்வு 23.2 சதவீதம், நிலக்கரி நுகர்வு 4 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரயில்வே சரக்கு போக்குவரத்து குறைவு.

பொருளாதாரத்தில் வெவ்வேறு வகையான துறைகளும் பெரியளவில் வேலையிழப்பை சந்தித்துள்ளன. நிதியமைச்சகம், கிட்டத்தட்ட தனியாக, பொருளாதாரம் சரிந்து மீண்டும் எழும் என்று கணிக்கிறது. 2020 – 21ல் சரிந்த 5 சதவீதம், 2021 – 22ல் 5 சதவீதம் உயர்ந்தால் வீழ்ந்த பொருளாதாரம் மீண்டதாக கருதப்படும். ஆனால், அது இல்லை. மொத்த உற்பத்தி, 2019 – 20ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே, அது மீண்டதாக கருதப்படும். ஆனால், அது 2022 – 23ம் ஆண்டு வரை நடக்காது. நிதி அமைச்சகம் நல்லது நடக்கும் என நம்புவதாக இருந்தால், ஏன் அதனால் ஒரு நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2020- 21ல் கணிக்க முடியவில்லை. நிதியமைச்சகத்துக்கு தைரியம் இல்லையா!

இக்கட்டுரையை எழுதியவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழில்: R.பிரியதர்சினி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment