Advertisment

இந்திய - பாக். சாமர்த்திய ஆட்டங்கள் - அணுசக்தி வல்லுநர் மட்ட விவாதத்தின் அவசியம்

India, Pakistan : இரண்டு அணுஆயுத எதிரி நாடுகளிடையே நம்பகமான பரஸ்பர அணுஆயுதத் தடுப்பை ஏற்படுத்துதல், திடீர் அணு ஆயுத தாக்குதலுக்கான சாத்தியத்தைக் குறைப்பதன் மூலம், ’அறிவுப்பூர்வமான ஸ்திரத்தன்மை’ எனப்படும் அடிப்படையை உருவாக்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india pakistan relations, pakistan nuclear weapons, lt general khalid kidwai, india nuclear program, pakistan army, indian express news

india pakistan relations, pakistan nuclear weapons, lt general khalid kidwai, india nuclear program, pakistan army, indian express news

இரண்டு அணுஆயுத எதிரி நாடுகளிடையே நம்பகமான பரஸ்பர அணுஆயுதத் தடுப்பை ஏற்படுத்துதல், திடீர் அணு ஆயுத தாக்குதலுக்கான சாத்தியத்தைக் குறைப்பதன் மூலம், ’அறிவுப்பூர்வமான ஸ்திரத்தன்மை’ எனப்படும் அடிப்படையை உருவாக்குகிறது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

படை-நவீனமயமாக்கல், பட்ஜெட்-முன்னுரிமை மற்றும் கூட்டு கட்டளை கட்டமைப்புகள் ஆகியவற்றின் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் நமது புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புத் தளபதியின் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், அவர் விரைவில், தேசிய கட்டளை ஆணையத்தின் (என்.சி.ஏ) முதல் ராணுவ ஆலோசகராக இருப்பார். அந்த திறனைக் கொண்டு இந்தியாவின் அணு ஆயுதth தடுப்புக்கு தீர்வுகாண வேண்டும். அவர் அவ்வாறு செய்யும்போது, அணு ஆயுத மோதலைத் தடுப்பதற்கான அமெரிக்க வியூகவாதி பெர்னார்ட் பிராடியின் பரிந்துரை குறித்து அவர் சிந்திக்கக்கூடும்: “இதுவரை, நமது ராணுவ அமைப்பின் முக்கிய நோக்கம் போர்களை வெல்வதே ஆகும். இனிமேல் அதன் முக்கிய நோக்கம் அவற்றைத் தவிர்ப்பதாக இருக்கவேண்டும்.

’அழகு’ என்பது “பார்ப்பவரின் கண்ணைப் பொறுத்தது” எனச் சொல்லப்படும் பொய்யைப் போலவே, அணு ஆயுதத் தடுப்பின் நம்பகத்தன்மையும் ’எதிரியின் மனதில்’ உள்ளது. ஒரு முதல் அணு ஆயுதth தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி அணு ஆயுதth தாக்குதலுக்கு வித்திடும் என்பதில் அவர் துளியும் சந்தேகம்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இரண்டு அணு ஆயுத எதிரி நாடுகளிடையே நம்பகமான பரஸ்பர அணு ஆயுதth தடுப்பை ஏற்படுத்துதல், திடீர் அணு ஆயுத தாக்குதலுக்கான சாத்தியத்தை குறைப்பது மூலம், ’விவேகமான ஸ்திரத்தன்மை’ எனப்படும் அடிப்படையை உருவாக்குகிறது. எனவே, ஓய்வுபெற்ற பாகிஸ்தான் லெப்டினென்ட் ஜெனரல் காலித் கிட்வாய், தெற்காசியாவின் நிரந்தர பதற்றத்துக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியூகம் வகுப்பு ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு பயிற்சி பட்டறையில் பேசிய கிட்வாய், “பிராந்திய ஆதிக்கத்திற்கான இந்தியாவின் தீராத உந்துதல், குறிப்பாக அதன் தற்போதைய பகுத்தறிவற்ற, நிலையற்ற மற்றும் போர்க்குணமிக்க உள் மற்றும் வெளிப்புற கொள்கைகள் ”பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறினார். கிட்வாய், பாகிஸ்தானின் தேசிய கட்டளை ஆணையத்தின் (என்.சி.ஏ) மையத்தில், 14 ஆண்டுகளாக வியூக வகுப்பு திட்டங்கள் பிரிவின் (எஸ்.பி.டி) இயக்குநர் ஜெனரலாக, பதவி வகித்து, அதன் அணு ஆயுத தடுப்பு மற்றும் அதன் கோட்பாடுகள் மற்றும் உத்திகளின் பரிணாம வளர்ச்சியைக் கண்காணித்து வந்தார். அவரது அறிவிப்புகள் பொது நுகர்வுக்கானவை என்றாலும், முறையான இந்தோ-பாக் அணுசக்தி உரையாடல் வரலாற்று ரீதியாக இல்லாத நிலையில், அவை சிந்தனைக்கான ஊட்டத்தை வழங்கவேண்டும்.

கிட்வாயின் இந்தப் பேச்சு, துணைக் கண்டத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் ஒரு திருத்தல்வாத சக்தி இந்தியாதானே தவிர பாகிஸ்தான் அல்ல என்று இதுவரையிலான வழக்கமான எண்ணத்தை தலைகீழாக மாற்ற முயற்சிக்கிறது.இந்தியாவால் தொடங்கப்பட்ட ’பெரிய அளவிலான ஸ்திரமின்மை வியூக வகுப்பு வழிமுறைகள்’ குறித்த அவரது விளக்கம், சுய மாயைக்கான பாகிஸ்தானிய திறனைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. மேலும் இந்தியாவிடமிருந்து வெளிப்பட்டுள்ள ’இருத்தலியல் அச்சுறுத்தல்’, அதன் பொறாமைக்கு அடித்தளமாக இருக்கும் உள்ளுக்குள் இருக்கும் விரோதத்தையும் வெளிப்படுத்துகிறது.

கிட்வாயின் வாதங்களின் தொடக்கப் புள்ளி 1974 ல் நடந்த இந்தியாவின் அமைதியான அணு ஆயுத சோதனை (பிஎன்இ) ஆகும். இது அவரைப் பொறுத்தவரை, “இந்தியாவால் தூண்டப்பட்ட உறுதியற்ற போர் வியூகத்தை” நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி என்பதால், பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்திற்கான தூண்டுதலாக இருந்தது. ஆயினும், பாகிஸ்தானின் அணுசக்தி நிபுணர் ஃபெரோஸ் ஹசன் கான், பாகிஸ்தானின் ’அணு ஆயுத முடிவு’, மிகவும் முன்னதாகவே, 1972 ஜனவரியிலேயே எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ, முல்தானில் விஞ்ஞானிகள் மத்தியில், “ இந்தியாவுக்கு எதிராக ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நடத்துவது பற்றி பேசுகையில், “… நாம் புல்லைச் சாப்பிட வேண்டியிருந்தாலும் அணு குண்டை உருவாக்குவோம்,”... என வீராவேசமாக முழங்கினார். அமெரிக்க ஆய்வாளர் ஜார்ஜ் பெர்கோவிச், இந்தியாவின் பி.என்.இ-க்கு பிந்தைய தோரணையைப் பற்றி எழுதுகையில், "தார்மீக சந்தேகங்கள், உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் சர்வதேச பரிசீலனைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இது "இஸ்லாமிய வெடிகுண்டை" பாகிஸ்தான் திருட்டுத்தனமாக பின்தொடரும் வரை இந்திரா காந்தி மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்கள் ஆயுதங்களை அங்கீகரிப்பதில் இருந்து தடுத்தது.

அதைத் தொடர்ந்து, 1986 ஆம் ஆண்டின் இறுதியில் "பிராஸ்டாக்ஸ்" என்ற ராணுவப் பயிற்சிக்காக இந்தியப் படைகள் திரண்டதையும், இது பாகிஸ்தானை கடும் எச்சரிக்கைக்கு உள்ளாக்கியதையும் கிட்வாய் குறிப்பிடுகிறார். இதனால், பாகிஸ்தான் தனது படைகளை அணிதிரட்டியது மட்டுமல்லாமல், அணு குண்டு தயாரிப்புத் திறன் பற்றிய குறிப்புகளையும் கைவிட்டதாகவும், இதன் காரணமாக "இந்தியாவின் போர் வியூக ஸ்திரத்தன்மை மீட்டெடுக்கப்பட்டது" என்றும் அவர் கூறுகிறார். உண்மையில், 1987 பிப்ரவரிக்குள் ராணுவ நெருக்கடி தானாகவே குறைந்துவிட்டாலும், " பாகிஸ்தானின் இருப்பு அச்சுறுத்தப்பட்டால் அணுகுண்டைப் பயன்படுத்துவதைப் பற்றி பாகிஸ்தானின் முரட்டு அணு விஞ்ஞானி கியூ கான் வீராவேசமாக பேசியதாக, மார்ச் மாதத்தில்தான் பத்திரிகையாளர் குல்தீப் நாயர் போட்டுடைத்தார்.

1990 களில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியதன் மூலமும், இறுதியில் 1998 ல் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டதன் மூலமும் ’இந்தியா முஷ்டியை உயர்த்தியது’ என கிட்வாய் குற்றம் சாட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை, இதன் விளைவாக ஏற்பட்ட உறுதியற்ற தன்மை, பாகிஸ்தானை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் புதிய வகைகளைச் சேர்க்கவும், அதன் சொந்த அணு ஆயுத சோதனைகளை நடத்துவதன் மூலம் பதிலடி கொடுக்கவும்,. இதனால் போர் வியூக சமநிலையை மீட்டெடுக்கவும் கட்டாயத்துக்குள்ளாக்கியது. 1980 கள் மற்றும் 90 களில், வட கொரியாவிலிருந்து ரகசியமாக ஏவுகணை தொழில்நுட்ப பரிமாற்றத்துடன், சீனாவிலிருந்து அணு ஆயுத வடிவமைப்புகள் மற்றும் பொருட்களைப் பெற்று, இந்தியாவை விட முன்னேறிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் பெற்றதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.

பாகிஸ்தான், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதற்கான உரிமையை ஒதுக்குவதைத் தவிர, 1998 முதல் அதிகாரபூர்வ அணுசக்தி கோட்பாட்டை அறிவிப்பதைத் தவிர்த்துவிட்டது. எனவே பாகிஸ்தானின் "குறைந்தபட்ச நம்பகமான தடுப்பி”லிருந்து "முழு ஸ்பெக்ட்ரம் தடுப்பு-FSD" (எதிர்த்தரப்பின் தோரனையைப் பொறுத்த முடிவு) க்கு மாறுவதற்கான காலவரிசை தெளிவாக இல்லை. கிட்வாய், எஃப்.எஸ்.டி திட்டத்தை இந்திய ராணுவத்தின் கோட்பாட்டிற்கு பதிலடியாக முன்வைக்கிறார். இது 2001-02 ஆம் ஆண்டின் இந்தியாவின் மந்தமான பொது அணிதிரட்டலுக்கான தீர்வாகும்.

" எஃப்.எஸ்.டி, ஒவ்வொரு இந்திய இலக்கையும் பாகிஸ்தானின் தாக்குதல் வரம்பிற்குள்" கொண்டுவருவதற்கான திறனில் கவனம் செலுத்துவதாகவும், எதிர் மதிப்பு, போர்க்களம் மற்றும் எதிர்-படை இலக்குகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பங்களை வழங்குகிறது என்றும் கிட்வாய் கூறுகிறார். இதன் விளைவாக,, "இந்திய ராணுவ கோட்பாடு சமன்படுத்தப்பட்டு, அணு ஆயுதத் தடுப்பு முதன்மையாக தூக்கிப் பிடிக்கப்படுகிறது" என்று அவர் நம்புகிறார். மேலும் பாகிஸ்தான், தனது எஃப்எஸ்டி "ஒரு பரந்த மோதலைத் தடுக்க சர்வதேச சமூகத்தை தெற்காசியாவிற்கு விரைந்து வர வைக்கும் " என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

இந்தியா 2019 பிப்ரவரியில் பாலகோட்டில் நடத்திய வான்வழித் தாக்குதல் விவகாரத்துக்குள் வந்தோமானால், இத்தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் "அணு ஆயுத மிரட்டல்" ஒன்றுமில்லாமாகி விட்டதாக கூறப்படுவதை கிட்வாய் கடுமையாக மறுக்கிறார். இந்திய விமானப்படை சர்வதேச எல்லையைத் தாண்டி தாக்குதல்களைத் தொடங்கினாலும், பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதம்தான், "ஒரு வெற்றிகரமான விமானத் தாக்குதலுக்கு அப்பால் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் இருந்து இந்தியாவைத் தடுத்தது" என்று அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் விமானப்படையின் வலுவான பதிலடி, போர் வியூக ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்ததோடு, "எந்த ஒரு புதிய வழக்கமும்" நிறுவப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

இறுதியாக, கிட்வாய் தவறான தகவல்கள் மற்றும் இந்தியாவின் அணு ஆயுத கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குட்டையைக் குழப்புவதற்கு மேல் எதுவும் இல்லை. பாலக்கோட் நெருக்கடியின் போது, இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்த் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடுகையில், அவர் ஒரு தெளிவற்ற கேள்வியை முன்வைக்கிறார். அது நமது போர் வியூகம் நலன் சார்ந்தது. “இந்தியா தனது முதல் தாக்குதல் தேர்வுகளுக்கு முன்பே இரண்டாவது தாக்குதல் தளத்தில் இருந்து அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து சிந்தித்ததா என்று வியப்படைய வைக்கிறது? "

பாகிஸ்தான் போர்க்கப்பலின் அணு ஆயுத தோரணை, போர்க்கள அணு ஆயுதங்கள் மற்றும் கடல் சார்ந்த இரண்டாவது தாக்குதல் திறன் ஆகியவை இந்தியாவிலிருந்து வேறுபடுகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும்-ஏவுகணை பாதுகாப்பு மற்றும் பல மறுநுழைவு போர்க்கப்பல்கள் வருகை இந்தோ-பாக் சமன்பாட்டை மிகவும் சிக்கலான மற்றும் உறுதியற்ற தன்மைக்கு உட்படுத்தும். அணு ஆயுத வாசல்கள், தடுப்பு-முறிவு மற்றும் விரிவாக்கம்-கட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் குறித்து பொதுவான புரிதல் இல்லாததால், அணுசக்தி நிபுணர்களிடையே - மற்ற எல்லா சிக்கல்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்ட - ஒரு நிலையான நம்பிக்கையை வளர்க்கும் உரையாடலைத் தொடங்குவது புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தின் பரஸ்பர நலனில் உள்ளது.

- டி. கே.

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment