Advertisment

தேர்தல் முடிவுகளில் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஐந்து மாநில தேர்தல்களில், பெரும்பான்மையான வாக்காளர்கள் வளர்ச்சியை விரும்பினர். ஆனால், தற்போதைய ஆட்சிக்கே வாக்களித்துள்ளனர். மக்களுக்கு நன்றாக வாழும் உரிமை தேவையானது. ஆனால், உண்மையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு இது மாற்று இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
தேர்தல் முடிவுகளில் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ப சிதம்பரம்

Advertisment

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், பெரும்பான்மையான வாக்காளர்கள் 'வளர்ச்சியை' மட்டுமே முக்கிய தேவையாக நினைத்தனர். ஆனால், தற்போதைய ஆட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்று தேர்தலுக்கு பிந்தைய முடிவுகளிலிருந்து நமக்கு தெரிகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் ஹர்ஷ்வர்தன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்கள் பீதியுடன் அச்சத்தின் காரணமாக எப்போதும் முகமூடியை அணிய வேண்டும் என்பதில்லை. முகக்கவசம் அணிவதா, வேண்டாமா என்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்தை ஆமோதித்து மருத்துவர் நிதின் ட்வீட் செய்தார். அதாவது மருத்துவம் படித்த ஒருவர் உங்களுக்கு சுகாதார அமைச்சராக இருக்கிறார். உங்கள் பயத்தையும் நீக்கியுள்ளார். இது குறித்து நான் பெருமைப் படுகிறேன். ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்களையும் நான் சார்ந்த மருத்துவ முறையையும் நம்புகிறேன். ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸை எளிதாக வெல்வோம். என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எதிரொலி அரங்கு

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளைப் படித்தபோது எனக்கு டாக்டர் வர்தன் மற்றும் டாக்டர் நிதின் நினைவுக்கு வந்தனர். நிதி அமைச்சகம் என்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி மேலாண்மைக்கு பொறுப்பான அதிகாரம் கொண்டது. எனவே அறிக்கையில் உள்ள விஷயங்களை வைத்து அதன் அடிப்படையை புரிந்து கொள்ள முடியும். எப்படி இருந்தாலும் , ரிசர்வ் வங்கி பணவியல் ஆணையம் மற்றும் பொருளாதாரத்தின் மேலாண்மை பற்றிய அதிகாரம் கொண்டது. அது பொருளாதாரம் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். இரண்டு அறிக்கைகளையும் படித்து, பல உண்மைகளும் தரவுகளும் பொதுவானதாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட போது, அவை ஒரே கையால் எழுதப்பட்டதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதில் நடுநிலை பேணப்பட்டிருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிலை குறித்த அறிக்கை உற்சாகமின்றி தொடங்குகிறது. உலக பொருளாதாரத்திற்கான கண்ணோட்டம் வீழ்ச்சி அடைவதற்கான அபாயங்களால் சூழப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றால் ஏற்பட்டு வரும் பாதிப்பு ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது... மத்திய வங்கிகள் எச்சரிக்கையுடன் உயர்ந்து வரும் அதிக பண பயன்பாட்டை குறைத்து பண வீச்சை கட்டுப்படுத்தி வருகின்றன. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இதனால் உலகளாவிய பொருளாதார மீட்சியின் வேகம் பெரும் சவாலாக இருக்கிறது. என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், விநியோகத்தில் காணப்படும் இடையூறுகளின் விளைவாக பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் முடங்கியுள்ளது. உலகளாவிய பேரியல் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. ஒரு சிறிய தவறு செய்தாலும் கவிழும் நிலையில் தான் இன்று பல நாடுகளின் பொருளாதாரம் உள்ளது. என்ன நடந்தாலும் சரி ஒரு தடவை முயன்று பார்த்து விடுவோம் என்ற நிலையில் முதலீட்டாளர்களின் உணர்வு இன்று இல்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் பொருளாதாரம் மறுமீட்சிக்கு தயாராக வில்லை என்ற குறிப்புடன் இந்த அறிக்கை முடிகிறது என்று சொல்லலாம்.

இதில் தொடக்கத்திலும் முடிவிலும் நிதி அமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பொதுவான அறிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை. நிதி அமைச்சகத்தின் அறிக்கை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உற்சாகமானது. ஆனால், அது தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறது. ஆனால், அதில் ஒரு எச்சரிக்கையும் இருக்கிறது. உலகின் சமீபத்திய நிகழ்வுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கக் கண்ணோட்டங்களில் நிச்சயமற்ற தன்மையை அதிகப்படுத்தியுள்ளதாக அந்த எச்சரிக்கை சொல்கிறது.

நமது கவலைகள்

இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நானும் வாழ்த்த விரும்புகிறேன். அதே சமயத்தில் பொருளாதாரம் குறித்த எனது கவலைகளையும் எச்சரிக்கையுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

  1. பொருளாதார பலமிக்க நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சராசரியாக 1.5 சதவீதம் குறைந்துள்ளதாக பன்னாட்டு செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் வளர்ச்சி 2 சதவீதமும், சீனாவின் வளர்ச்சி 3.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 0.5 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருக்கும் என்றும் 2022-23 இல் அது 9 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை நம்புவது கடினமாக உள்ளது.

  2. மிகவும் முன்னேறிய பொருளாதார பணக்கார நாடுகளில் பொருளாதாரத்தில் மாறுபாடு காணப்படுகிறது. இங்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. தங்கம், உணவு மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் பணவீக்க விகிதம் பிப்ரவரியில் 13.1 சதவீதமாகவும், நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் I பணவீக்கம் 6.1 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. உணவு தானியங்கள் விலை ஏற்றம் 5.9 சதவீதமாகவும், தொழில் உற்பத்தி துறையில் விலைவாசி உயர்வு 9.8 சதவீதமாகவும், எரிபொருள் தொடர்பான பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து 8.7 சதவீதமாகவும் உள்ளது.

  3. முதலீட்டாளர்களின் உணர்வுகள் ஒரு வித தளர்வை சந்தித்துள்ளது. பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது, கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து வருகிறது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தப் போவதாக எச்சரித்துள்ளது.

  4. வேலைவாய்ப்பில், இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளது மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

  5. செலவினத்தில் அரசாங்கம் அரசாங்க மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறது. இது சந்தேகத்துக்குரியது மற்றும் விவாதத்துக்குரியது. ஒரே தொகையை வெவ்வேறு தலைப்புகளில் இருமுறை அதிகப்படுத்தி சொல்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கான நிதி சந்தைகளில் கடனாக திரட்டப்பட உள்ளது.

நலவாழ்வு தான் வளர்ச்சியா?

இன்றைய நிலையில் நாம் திறமையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும். உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்காரர்களின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கின்றன. ஏழைகள் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் ஏழ்மையானவர்கள், படிக்காதவர்கள் மற்றும் திறமையற்றவர்கள் முடியாத வேலைகள் என்று அரசாங்கம் சில தரவுகளை இவர்களுக்கு எட்டாக் கனியாக்கியுள்ளது. அவர்களுக்கு பண்ணைகள், மற்றும் சிறு நிறுவனங்களில் வேலைகள் தேவைப்படுகிறது. இப்படி செய்வது தற்காலிகமாக அவர்களது கஷ்டத்தை போக்கும். ஆனால், நிரந்தரமான வளர்ச்சியை அளிக்காது.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், பெரும்பான்மையான வாக்காளர்கள் 'வளர்ச்சியை' விரும்பினர். ஆனால் தற்போதைய ஆட்சிக்கே வாக்களித்துள்ளனர். மக்களுக்கு நன்றாக வாழும் உரிமை தேவையானது. ஆனால் உண்மையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு இது மாற்றாக இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் குறைந்தது நான்கு மாநிலங்களில், மக்கள் மாற்றத்தைவிட தற்போதைய நிலைக்கு வாக்களித்ததாக தெரிகிறது. இப்படி முடிவெடுத்ததின் பின்னணியில் உண்மையான நிரந்தரமான வளர்ச்சியை மக்கள் விரும்பவில்லையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

தமிழில்: த.வளவன், மூத்த பத்திரிகையாளர்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India P Chidambaram Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment