நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்ட அஸ்வின் போராடி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளார் என்று அவருடைய மனைவி பிரித்தி அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டி தொடரை வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி டி20 தொடரை வென்றது.
இதையடுத்து, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட்டிலும் இந்திய அணி 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில், 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா 52, ஷுப்மன் கில் 31, புஜாரா 77, ரஹானே 4 ரன், ரிஷப் பண்ட் 97 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அவுட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்கல் எல்லாம் பந்துவீச்சாளர்கள்தான் அவரகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணி மூர்க்கமாக பந்துவீச்சு தாக்குதல் நடத்தியது.
ஆனால், இந்திய அணியில் விஹாரியும் அஸ்வினும் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான பந்துகளை எல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் விஹாரியையும் அஸ்வினையும் அவுட் ஆக்க முடியாமல் ஓய்ந்துபோன ஆஸ்திரேலிய அணி 3வது டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். இதனால், 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்திய அணி 2வது இன்னிங்ஸ் முடிவில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தனர். விஹாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களும் அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் தோல்வியைத் தவிர்த்து டிரா செய்ய காரணமானார்கள்.
சிட்னி மைதானத்தில் பார்வையாளர்களின் இனவெறி துஷ்பிரயோகத்துக்கு மத்தியில் அஸ்வினும் விஹாரியும் போராடி போட்டியை டிரா செய்ததன் மூலம் இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்களால் மறக்க முடியாத போட்டியானது.
The man went to bed last night with a terrible back tweak and in unbelievable pain. He could not stand up straight when he woke up this morning. Could not bend down to tie his shoe laces. I am amazed at what @ashwinravi99 pulled off today.
— Prithi Ashwin (@prithinarayanan) January 11, 2021
இந்த நிலையில்தான், அஸ்வின் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முதுகுவலியுடன் விளையாடி போட்டியை டிரா செய்து சாதித்திருப்பது அவருடைய மனைவி பிரித்தி அஸ்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அஸ்வினின் மனைவி பிரித்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நேற்றிரவு தூங்கச் செல்லும்போது கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டார். இன்று காலையில் எழுந்திருக்கும்போது அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை. ஷூ லேஸ்களைக் கூட கட்ட முடியாத அளவுக்குக் குனிய சிரமப்பட்டார். அஸ்வின் இன்று சாதித்ததை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அஸ்வின் கடுமையான முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்து சாதித்துள்ளதை அறிந்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.