Beijing Winter Olympics 2022 Tamil News: 2022-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜீங்கில் நாளை வெள்ளிக்கிழமை (4-ம் தேதி) முதல் தொடங்குகிறது. இதில் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் ஒரே வீரர் தான் போட்டியிடுகிறார். அவரது பெயர் ஆரிஃப் கான். இவர் ஸ்லாலோம் (Slalom) மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் Giant Slalom ஆகிய இரு பனிச் சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
31 வயதுடைய ஆரிஃப் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கில் பிறந்தவர். தனது நான்காவது வயதிலேயே பனிச் சறுக்கில் ஈடுபடத் தொடங்கிய இவர் தனது 12வது வயதில் தனது முதல் தேசிய ஸ்லாலோம் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றார். மேலும் தனது அடுத்தகட்ட பயிற்சிகளை ஐரோப்பாவில் தொடர்ந்த இவர் ஆசிய போட்டிகள், உலக தொடர்கள் என தற்போது வரை 127 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.
ஆரிஃப்க்கு அவரது தந்தை யாசின் கான் தான் ரோல் மாடலாம். பனிச்சறுக்கு உபகரணக் கடை வைத்திருக்கும் அவரது தந்தை அவரை எப்போதும் ஊக்கப்படுத்துவாரம். ஆரிஃப்பும் தந்தையைப்போல் அபர்வத்தின் சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாடி கற்று தேர்ந்திருக்கிறார்.
டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ் ( TOPS - Target Olympic Podium Scheme) இந்திய விளையாட்டு துறை ஆரிஃப் கானை சமீபத்தில்தான் சேர்த்து கொண்டது. இதன்மூலம் ஆரிஃப் தன் பயிற்சிக்கான ரூ. 17.46 லட்சத்தை அரசிடம் இருந்து உதவியாய் பெற்று இருக்கிறார்.
ஆரிஃப் பியாங்சாங்கில் நடந்த 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்பி இருந்த நிலையில், க்ரவுட் ஃபண்டிங்கிற்குப் பிறகும் பயிற்சி மற்றும் உபகரணச் செலவுகளுக்கான ரூ. 1.5 லட்சத்தை அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவரால் அந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இயலவில்லை.
இந்நிலையில், தற்போது, ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் மத்திய அரசு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. இதில் ஜம்மு காஷ்மீர் அரசு அவருக்கு 40 சதவீத நிதி உதவியை விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. அவர், தனது குடும்பத்தினரின் உதவியுடன், 50 சதவீத செலவுகளை ஈடுகட்ட உள்ளார். தவிர, ஜம்மு மற்றும் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, அவரது பயிற்சிக்கு உதவுவதற்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
தெற்காசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் (2011 இல் உத்தரகாண்டில் நடைபெற்ற) ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் ஆரிஃப் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் இரண்டு பதிப்புகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.