BWF World Championships: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டச்சு நாட்டின் மார்க் கால்ஜூவ்வை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 21-8, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெறும் 26 நிமிடத்தில் டச்சு வீரரை வீழ்த்திய இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும், மற்றொரு ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்ஷ்யா சென் வெற்றி பெற்றுள்ளார். இவ்விரு அசத்தலான வெற்றிகள் மூலம் இந்தியாவுக்கு குறைந்தது 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்தும் சென்னும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
எனினும், இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பழக்கமான எதிரியான டாய் சூ யிங்கிடம் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான பிவி சிந்துவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“