44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்தியா சார்பில் மூன்று அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணிகள் விளையாடி அனைத்து போட்டிகளையும் வென்றது. பிரக்ஞானந்தா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஜூலை 29 அன்று முதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் விளையாடினார். முன்னதாக போட்டி அரங்கிற்கு அவர் வந்தபோது அனைத்து வீரர்களும் பிரமித்து பார்த்தனர். உறைந்து போய் நின்றனர். கார்சல்சனுடன் முன்பு போட்டியிட்ட வீரர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கென்ய வீரர் ஒருவர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முயன்றார். ஆனால் அவர் மறுத்து, வீரரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். கார்சல்சன் போட்டியில் கவனம் செலுத்தினார்.
கார்ல்சன் தனது முதல் சுற்றில் உருகுவே வீரர் ஜார்ஜ் மேயரிடம் போட்டியிட்டார். நாற்காலியில் அமர்ந்த கார்ல்சன், மேயரைப் பார்த்து புன்னகைத்தார். ஜார்ஜ் மேயர், உருகுவேக்கு இடம்பெயர்ந்த ஜெர்மன் கிராண்ட்மாஸ்டர்.
ஜார்ஜ் மேயர் கார்ல்சனுடன் முன்பு போட்டியிட்டுள்ளார். அவருக்கு கடும் சவால் கொடுத்துள்ளார். ஒரு முறை கார்ல்சனை தோல்வியின் விளிம்பிற்கு தள்ளினார். கடுமையான சவால் கொடுக்கும் போட்டியாளராக உள்ளார்.
வெள்ளை நிற காய்களுடன் அவரது போட்டியை தொடங்கிய கார்ல்சன் 80வது நகர்த்தலில் உருகுவே வீரர் ஜார்ஜ் மேயரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.